அகமதாபாத் : 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதால் சென்னை அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கேப்டன் தோனியோ அகமதாபாத் மைதான ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி அசத்தினார். இந்த வெற்றியால் எமோஷனலான தோனி, ஜடேஜா தூக்கி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வெற்றியையடுத்து சென்னை அணி வீரர்கள் மைதானத்திலேயே வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட டி20 ஆட்டமாக குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி அமைந்துள்ளது. 28ஆம் தேதி நடக்க வேண்டிய ஆட்டம் மழை காரணமாக ரிசர்வ் டேவுக்கு மாற்றப்பட்டு, பின்னர் ஈரப்பதம் காரணமாக 30ஆம் தேதி நள்ளிரவு வரை நீண்டது. இதனால் சிஎஸ்கே வெற்றிக் கொண்டாட்டங்கள் அதிகாலை வரை நீடித்தது. இந்தப் போட்டி நடப்பதற்கு அகமதாபாத் மைதான ஊழியர்கள் மிக முக்கிய காரணமாக அமைந்தனர்.
இதனால் சென்னை அணியின் வெற்றிக்கு பின் சில நிமிடங்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கேப்டன் எம்எஸ் தோனி, பின்னர் மைதான ஊழியர்களுடன் சில நிமிடங்கள் உரையாடினார். அதன்பின்னர் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் கேப்டனுக்கும், தலைவனுக்கான பண்பு என்று ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
