மும்பை: சிஎஸ்கே அணிக்காக தோனி மீண்டும் எப்போது களமிறங்குவார் என்ற மிகப்பெரிய கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அவருக்கு என்ன ஆனது, அடுத்த போட்டியில் விளையாடுவாரா அல்லது மாட்டாரா என்பது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கூட அவர் இதுவரை உறுதியாகத் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியுமே பெரும் குழப்பத்திலும் தவிப்பிலும் ஆழ்ந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளாலும், முக்கிய வீரர்களின் காயங்களாலும் மிகக் கடுமையாகப் போராடி வருகிறது. தொடர் தொடங்குவதற்கு முன்பே தோனிக்கு காலில் பலத்த தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டது. இதனால் குறைந்தது 2 வாரங்கள் அவர் ஓய்வில் இருப்பார் என கூறப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவர் எந்த போட்டியிலும் விளையாடாமல் வெளியே அமர்ந்துள்ளார். பெரும்பாலான வெளியூர் போட்டிகளுக்கு அவர் அணியுடன் பயணிக்கவும் இல்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மிக முக்கிய லீக் போட்டியில் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக தோனி மும்பை வந்துள்ளதால் அவர் களமிறங்குவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பே அவர் வான்கடே மைதானத்தில் விக்கெட் கீப்பிங் பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், தான் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேனா, மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்குவேனா என்பது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் அவர் இதுவரை எந்த தகவலையும் வாய் திறந்து சொல்லவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை அவர் நினைத்தால் மும்பைக்கு எதிரான போட்டியில் இம்பாக்ட் வீரராகக் களமிறங்க வாய்ப்புள்ளது. அல்லது ஏப்ரல் 26 அன்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் நேரடியாக விளையாடலாம் எனத் தெரிகிறது. மறுபுறம் மும்பை அணியிலும் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் கூட பங்கேற்கவில்லை என்பதால் அவரும் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆடுவது சந்தேகமாகவே உள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் தலா 5 முறை என மொத்தம் 10 கோப்பைகளைப் பகிர்ந்துள்ள சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இந்த பலம் வாய்ந்த அணிகள் இரண்டும் தற்போது புள்ளிப்பட்டியலில் பின்தங்கி தவித்து வருகின்றன. ஏற்கனவே 201 ரன்கள் குவித்து நல்ல பார்மில் இருந்த சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பேட்டிங் வரிசை பலவீனமாக உள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில், தோனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை எதிர்பார்த்து ஒட்டுமொத்த சிஎஸ்கே நிர்வாகமும் பதைபதைப்புடன் காத்துக்கிடக்கிறது.