லக்னோ: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமே "லார்ட்" ஷர்துல் தாக்கூர் தான் என சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். இது ஒரு வகையில் உண்மையும் கூட. நேற்றைய போட்டியில் அவர் வீசிய 19 ஆவது ஓவருடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்றே சொல்லலாம். என்ன நடந்தது? என்று பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 167 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறந்த துவக்கம் கிடைத்தது. ஷேக் ரஷீத் 19 பந்துகளில் 27 ரன்களையும், ரச்சின் ரவீந்திர 22 பந்துகளில் 37 ரன்களையும் அடித்தனர். அவர்களது ஆட்டத்தால் சிஎஸ்கே அணி சற்று முன்னிலையில் இருந்தது. ஆனால் அதன் பிறகு ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததற்கு பிறகு மீண்டும் சிஎஸ்கேவின் பேட்டிங் மந்த நிலைக்கு மாறியது.
சிவம் துபே நிதானமாக ஆடி வந்தார். விஜய் சங்கர் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஏழாவது வரிசையில் தோனி பேட்டிங் செய்ய வந்தார். அவர் வந்தவுடன் அதிரடியாக ஆடினார். எனினும், சிஎஸ்கே அணி கடைசி இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது.
அப்போது முக்கியமான 19 வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரில் சிவம் துபே முதல் இரண்டு பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் நோ-பாலில் ஒரு சிக்ஸ் அடித்தார். அதன் பிறகு ஷர்துல் ஒரு ஒயிடையும் வீசினார். கடைசி பந்தில் தோனி ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்களை சேர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அத்துடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் சிவம் துபே ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு ஷர்துல் தாக்கூர் வீசிய 19வது ஓவர் தான் முக்கிய காரணம் என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
முன்னாள் சிஎஸ்கே வீரரான ஷர்துல் தாக்கூர் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 56 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். மிக மோசமான பவுலிங்கை பதிவு செய்து இருந்தார். சராசரியாக இரண்டு அணிகளும் 160 ரன்கள் சேர்த்த இந்தப் போட்டியில் ஷர்துல் தாக்கூர் ஒரு ஓவருக்கு 14 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்ததே சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.