சென்னை: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலவீனமான பேட்டிங் வரிசையே முக்கிய காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இம்பேக்ட் வீரரான சிவம் துபேவையும் சேர்த்து பேட்ஸ்மேன்களாக கருதக்கூடியவர்கள் ஐந்து பேர் மட்டுமே உள்ளனர். சிவம் துபே அதிரடியாக ஆடும் திறனைக் கொண்டிருந்தாலும், அவரை முழுநேர பேட்ஸ்மேனாக கணக்கிடாத பட்சத்தில், சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், விஜய் ஷங்கருடன் சேர்த்து நான்கு முழு நேர பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருக்கிறார்கள். முதல் ஐந்து இடங்களில் இவர்கள் பேட்டிங் செய்கின்றனர்.

ஆறாம் வரிசையில் ரவீந்திர ஜடேஜாவும், ஏழாம் வரிசையில் தோனியும் பேட்டிங் செய்கின்றனர். சமீப காலமாக, இவர்கள் இருவரும் பேட்டிங்கின் மூலம் மட்டும் போட்டிகளை வென்று கொடுப்பது சவாலாக உள்ளது என்பதை கருத்தில் கொள்ளும்போது, சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசை அனுபவம் வாய்ந்ததாக இருந்தாலும், ஆழம் குறைவாக இருப்பது தெரிகிறது. தோனிக்கு பிறகு பெரும்பாலும் பந்துவீச்சாளர்களான முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரானா போன்றவர்களே உள்ளனர்.
இம்பேக்ட் வீரருடன் சேர்த்து ஐந்து பந்துவீச்சாளர்கள், ஒரு ஆல்ரவுண்டர் என சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் சற்று பலவீனமாக காணப்படுகிறது. மற்ற அணிகளில் அதிக ஆல்ரவுண்டர்கள் அல்லது பேட்டிங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்கள் என குறைந்தது ஏழு வீரர்கள் வரை பேட்டிங் ஆழம் இருக்கிறது. ஆனால், சிஎஸ்கே அணியில் அந்த நிலை இல்லை.
இந்தப் பலவீனத்தை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேற்றைய போட்டியில் நன்கு பயன்படுத்திக் கொண்டது. போட்டியின் துவக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கேவுக்கு அழுத்தம் கொடுத்தது. சிஎஸ்கே அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் விரைவாக விழுந்துவிட்டாலே, அந்த அணியின் ரன் குவிக்கும் வேகம் கணிசமாக குறைந்துவிடும் என்பதை எதிரணிகள் தற்போது தெளிவாக அறிந்து வைத்துள்ளன.
நேற்றைய போட்டியிலும் ரச்சின் ரவீந்திரா 3 ரன்கள், ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்கள் மற்றும் டெவோன் கான்வே 13 ரன்கள் எடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே வெளியேறியதால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை தடுமாறத் தொடங்கியது.
அடுத்து வந்த சிவம் துபேவும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அத்துடன், சிஎஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வந்த வீரர்கள் போராடியபோதும், அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. விஜய் ஷங்கர் அடித்த அரைசதம் வெட்டி வேலையாகவே அமைந்தது. அவர் அதிரடியாக ஆடவோ, ரன் ரேட்டை அதிகரிக்கவோ எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுவே இந்தப் போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன? :
சிஎஸ்கேவின் பலவீனமான பேட்டிங் வரிசையே தோல்விக்கு காரணம் என விமர்சகர்கள் கருத்து.
அணியில் சிவம் துபே உட்பட 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ளனர்; ஜடேஜா, தோனிக்குப் பிறகு பேட்டிங் ஆழம் குறைவு.
மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் சிஎஸ்கேவில் ஆல்ரவுண்டர்கள், பேட்டிங் ஆழம் குறைவாக உள்ளது.
டெல்லி அணி ஆரம்பத்திலேயே ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, சிவம் துபே விக்கெட்டுகளை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொற்ப ரன்கள் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.