சென்னை: 2026 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் பரிமாற்ற (Trade) பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கப் போவதாகக் கடந்த சில நாட்களாக இணையத்தில் வதந்திகள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. அவரை வாங்க வேண்டி, ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே விட்டுக் கொடுக்கும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த பரபரப்பான சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு நையாண்டி வீடியோ, இந்த விவாதத்தை தற்காலிகமாக முடித்து வைத்துள்ளது. யாரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், வீரர்கள் பரிமாற்றம் குறித்த வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சிஎஸ்கே ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

அதில், சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் இடம்பெற்றுள்ள ஒரு நகைச்சுவையான காணொளி பகிரப்பட்டுள்ளது. 2026 ஐபிஎல் குறித்த வதந்திகள் எந்த அளவிற்குச் சென்றுவிட்டதென்றால், தன்னையே (காசி விஸ்வநாதன்) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, ப்ரீத்தி ஜிந்தாவிற்குப் பதிலாக டிரேட் செய்யப் போவதாக வதந்தி பரவுவதாக அவர் கிண்டலாகக் கூறுவது போல அந்தக் காணொளி அமைந்துள்ளது.
காணொளியின் முடிவில், "டிரேட் வதந்திகள் மனநல அபாயங்களுக்கு உட்பட்டவை. புத்திசாலித்தனமாக இருக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதாவது அதிகாரப்பூர்வமற்ற டிரேட் செய்திகளை கேட்டு மனநிலை பாதிக்கப்படாதீர்கள் என சிஎஸ்கே நிர்வாகம் கூறி உள்ளது. அதே சமயம், சஞ்சு சாம்சன் குறித்த வதந்திகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், ரசிகர்களைப் பொறுமை காக்குமாறு சிஎஸ்கே நிர்வாகம் சூசகமாகத் தெரிவித்துள்ளது.
2026 ஐபிஎல் சீசனுக்கான வீரர்களைத் தக்கவைக்கும் காலக்கெடு நெருங்கி வருவதால், சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் வேகம் எடுத்துள்ளது. முன்னதாக, சஞ்சு சாம்சனுக்காக தங்கள் அணியின் முக்கிய வீரர் ஒருவரை விட்டுக்கொடுக்க சிஎஸ்கே விரும்பாததால், இந்த டிரேட் சாத்தியமில்லை என்று செய்திகள் வெளியாகின.
ஆனால், கிரிக்கெட் இணையதளமான 'கிரிக்பஸ்' நேற்று வெளியிட்ட செய்தியில், சஞ்சு சாம்சனின் டிரேட் தொடர்பாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் "மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் சென்னையின் ஒரு முக்கிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குச் செல்ல அவருக்குச் சம்மதமா என்றும் அவரிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த டிரேட் வதந்திகளுக்கு மத்தியில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் செய்தியையும் காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், "எம்.எஸ். தோனி அடுத்த சீசனில் (IPL 2026) நிச்சயம் விளையாடுவார் என்று எங்களிடம் கூறியுள்ளார்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடும் 17-வது சீசனாகவும், ஒட்டுமொத்தமாக அவரது 19-வது சீசனாகவும் அமையும். இதுவரை சென்னை அணிக்காக 248 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4,865 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை அணிக்குக் கோப்பையை வென்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024 சீசனின் தொடக்கத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், தற்போது ருதுராஜ் கெய்க்வாட் அணியை வழிநடத்தி வருகிறார். சஞ்சு சாம்சன் வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, 'தல' தோனியின் ஆட்டத்தை அடுத்த ஆண்டும் காண முடியும் என்ற செய்தி ரசிகர்களுக்குப் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.