சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி ஆறு போட்டிகளில் ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படுமோசமாக விளையாடி 103 ரன்கள் மட்டுமே எடுத்தது சிஎஸ்கே அணி. அந்த அளவுக்கு அந்த அணியின் பேட்டிங் பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
தோனி மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆன பிறகும் அந்த அணியில் எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை. இன்னும் மோசமாகத்தான் அந்த அணி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இது அனைத்திற்கும் காரணமே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 4 மாதங்களுக்கு முன்பு செய்த விஷயங்கள்தான் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்திலேயே சிஎஸ்கே அணி தனது தோல்வியை தானே எழுதிவிட்டது என்று இன்று அனைவரும் விமர்சித்து வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சனிக்கிழமை போட்டியில் தோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே பிரித்து மேயப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், வழக்கம் போல துவக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா 4 ரன்களிலும், டேவோன் கான்வே 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ராகுல் திரிபாதி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் வந்தவுடன் ஒரு கேட்சை கொடுத்தார். ஆனால் சுனில் நரைன் அதை தவறவிட்டதால் 29 ரன்கள் எடுத்தார். சிவம் துபே நிதானமாக விளையாடி 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். கடைசி ஆறு பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். தோனி 4 பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது சிஎஸ்கே அணி. 104 ரன்கள் என்ற இலக்கை எந்தவித சிரமமும் இன்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் எட்டி வெற்றி பெற்றது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, அடுத்து விளையாடிய ஐந்து போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து இருக்கிறது. இதற்கு காரணம் அணித் தேர்வு தான். 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் மற்ற அணிகள் எல்லாம் நட்சத்திர வீரர்களையும், பவர் பிளே பவுலர்களையும், மிஸ்டரி ஸ்பின்னர்களையும், அதிரடி பினிஷர்களையும், உள்நாட்டு டி20 தொடர்களில் பட்டையை கிளப்பிய இளம் வீரர்களையும் போட்டி போட்டு வாங்கிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விசுவாசத்திற்காக சில வீரர்களையும், அனுபவத்திற்காக சில வீரர்களையும் வாங்குவதாக நினைத்து தனக்குத்தானே குழி தோண்டிக்கொண்டிருக்கிறது.
இதில் பலரும் சுட்டிக்காட்டுவது ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை ஏலத்தில் சிஎஸ்கே அணி ஏன் வாங்கியது? எந்த நோக்கத்தில் அவர்களை சிஎஸ்கே அணி வாங்கியது? என்பது பற்றி தான். ராகுல் திரிபாதி மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அவர்களுக்கு செலவிட்ட தொகையை இளம் வீரர்களுக்காகவோ அல்லது வேறு சில நட்சத்திர வீரர்களை வாங்குவதற்காகவோ செலவிட்டிருக்கலாம். அங்குதான் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தவறு செய்திருக்கின்றனர். அவர்கள் தான் ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த வீரர்களை வாங்க வேண்டும் என்ற முடிவை எடுப்பதில் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்கள்.
அதேபோல ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் மீண்டும் சிஎஸ்கே உரிமையாளருடன் நெருக்கமாக மாறியதால் அவரை ஏலத்தில் எப்படியும் வாங்கிவிட வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் உறுதியாக இருந்தது. ஒருவேளை சிஎஸ்கே அணி அஸ்வினுக்கு ஏலத்தில் போட்டி போட்டிருக்காவிட்டால் அவருக்கு 9.75 கோடி ரூபாய் என்ற தொகை கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
ஏனெனில் மற்ற அணிகள் அஸ்வினை வாங்குவதற்கு அத்தனை ஆர்வம் காட்டவில்லை. ஆனால், சிஎஸ்கே அணி எப்படியும் அவரை வாங்கும் என்பதால் அவரது ஏலத் தொகையை உயர்த்தும் வேலையைத்தான் மற்ற அணிகள் செய்தன. அந்த வலையில் சிஎஸ்கே அணி வீழ்ந்தது. அஸ்வினை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது பலரும் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏலத்தில் கே.எல்.ராகுலை வாங்குவதற்கு சிஎஸ்கே அணி முயற்சி செய்தது, ஆனால் அவரது தொகை 14 கோடியை எட்டியவுடன் சிஎஸ்கே அணி பின்வாங்கியது. ஆனால், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி மற்றும் அஸ்வின் ஆகிய மூவரை வாங்கியதற்கு பதிலாக கே.எல்.ராகுலை மட்டும் வாங்கி இருந்தாலும் கூட சிஎஸ்கே அணி அதனால் மிகப் பெரிய பலனை அடைந்திருக்கும். தற்போது நல்ல பேட்ஸ்மேன் இல்லாமல் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது என சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுவரை நடந்த ஆறு போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் தான் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. 180 ரன்களுக்கு மேல் சேசிங் செய்ய முடியாது என வெளிப்படையாக முன்னாள் வீரர்கள் அனைவரும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையை விமர்சித்து வருகிறார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே முதலில் பேட்டிங் செய்து வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த விமர்சனத்தை நிரூபித்து காட்டி இருக்கிறது சிஎஸ்கே பேட்டிங் வரிசை.
சிஎஸ்கே அணியில் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால் அது ருதுராஜ் கெய்க்வாட் தான். ஆனால் அவர் தற்போது காயத்தால் விலகி இருக்கிறார். அவரை அணியை விட்டு நீக்கிவிட்டு அவருக்கு இணையான பேட்ஸ்மேன் ஒருவரை சிஎஸ்கே அணி தேர்வு செய்யலாம். ஆனால், இப்போதும் விசுவாசத்தை சுட்டிக்காட்டி ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் இருந்து நீக்க மறுத்து இருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம்.
அவர் கேப்டனாக இருக்கும் நிலையில் அவரை அணியிலிருந்து இப்போது நீக்கினால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது அவரை தக்க வைக்க முடியாது. ஏற்கனவே, ஏலத்தில் இதே போன்ற விசுவாசம், அனுபவம் போன்ற விஷயங்களை சொல்லித்தான் சிஎஸ்கே அணி தனக்குத்தானே மண்ணை வாரி இறைத்துக்கொண்டது.
தற்போது மீண்டும் அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போதும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாக சொல்லிக்கொண்டு வேறு நல்ல பேட்ஸ்மேனை தேர்வு செய்யும் வாய்ப்பையும் சிஎஸ்கே அணி தவறவிட்டு இருக்கிறது. ஆறு போட்டிகளில் ஐந்து தோல்விகளை சந்தித்து இருக்கும் சிஎஸ்கே அணி இந்தத் தோல்விகளிலிருந்து மீண்டு பிளே ஆஃப் செல்லும் என்ற நம்பிக்கையும் ஒட்டுமொத்தமாக தற்போது நழுவிப் போய் உள்ளது.
இது அத்தனையுமே ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்த வீரர்களால் தான் நடந்துள்ளது. ஐபிஎல் ஏலத்தை சரியாக சிஎஸ்கே அணி பயன்படுத்தவில்லை அதுதான் உண்மை. தற்போதைய இருக்கும் வீரர்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் சிஎஸ்கே அணி திணறி வருகிறது.