சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குறைந்தபட்சம் தனக்கு மீதமுள்ள கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தையாவது பிடிக்குமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கு இன்று ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால், ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறிவிடும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பத்தாவது இடத்திற்குச் செல்லும். ஏனெனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த லீக் போட்டியே இந்த ஆண்டில் அந்த அணிக்கு கடைசிப் போட்டியாகும்.

இந்த ஆண்டு இதுவரை 13 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி உள்ளது. அதில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று 6 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 12 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று, குறைவான நெட் ரன் ரேட் காரணமாகப் பத்தாவது இடத்தில் உள்ளது.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தினால் 8 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் தனது ஐபிஎல் தொடரை முடித்துக் கொள்ளும். அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகத் தனது கடைசிப் போட்டியில் விளையாட உள்ளது. அதில் தோல்வி அடைந்தாலும் சிஎஸ்கே அணி ஒன்பதாவது இடத்தில் நீடிக்கும்.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அதிலும் சுமார் ஐந்து போட்டிகளை வெற்றிக்கு மிக அருகே சென்று தோற்று இருக்கிறது. எனவே, அந்த அணி சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெறுமா அல்லது சிஎஸ்கே அணி தனது இளம் வீரர்களை வைத்து ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.