சென்னை: தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸை, மாற்று வீரராக ஒப்பந்தம் செய்ததில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐபிஎல் விதிமுறைகளுக்கு உட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
ஐபிஎல் 2025 தொடருக்காக சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெற்ற மெகா ஏலத்தில், இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ₹2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே காயம் காரணமாக குர்ஜப்னீத் சிங் விலகினார்.

இதையடுத்து, அவருக்குப் பதிலாக 'பேபி ஏபிடி' என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் டெவால்ட் பிரெவிஸை சிஎஸ்கே அதே ₹2.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் அஸ்வின் தனது யூட்யூப் வீடியோவில் டெவால்ட் பிரெவிஸ்-ஐ அதிக தொகைக்கு, அதாவது மாற்று வீரருக்கான விதிகளுக்கு உட்பட்ட தொகையை விட கூடுதல் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்ததாக கூறி இருந்தார்.
இது ஐபிஎல் விதிகளுக்குப் புறம்பானது என்றும், சிஎஸ்கே அணி மறைமுகமாக வீரர்களைத் தேர்வு செய்வதாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. சிஎஸ்கே அணி மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கூறி வந்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "ஐபிஎல் 2025 தொடரில், மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தபோது, அனைத்து நடவடிக்கைகளும் ஐபிஎல் விதிமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டன என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறது.
ஐபிஎல் வீரர்கள் ஒழுங்குமுறை விதிகள் 2025-27, பிரிவு 6.6-ன் கீழ் 'மாற்று வீரர்கள்' என்ற தலைப்பில் உள்ள விதியின்படி, 'காயமடைந்த அல்லது விளையாட முடியாத வீரருக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட அதிகமான சம்பளத்திற்கு ஒரு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யக்கூடாது' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு நிர்ணயிக்கப்பட்ட ₹2.2 கோடி என்ற தொகைக்கு மிகாமல், அதே தொகைக்கு டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் எந்த விதிமீறலும் இல்லை."
மேலும், சிஎஸ்கே தனது அறிக்கையில், ஏப்ரல் 18, 2025 அன்று ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையையும் இணைத்துள்ளது. அந்த அறிக்கையிலும், "காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்குப் பதிலாக, தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ₹2.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது" என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், பிரெவிஸின் நியமனம் ஐபிஎல் நிர்வாகத்தின் முழு ஒப்புதலுடனேயே நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியுள்ள பிரெவிஸ், தனது அதிரடியான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். சிஎஸ்கே அணியின் இந்தத் தெளிவான விளக்கத்தின் மூலம், டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.