துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தொடர் நாயகன் விருது இந்திய வீரர் ஒருவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டது. இதை வென்ற பிறகு, நியூசிலாந்து அணியின் இறுதிப் போட்டி தோல்வியால் சோகத்தில் இருந்த ரச்சின் ரவீந்திரா, "கிரிக்கெட் ஒரு கொடூரமான விளையாட்டு" என்றார்.
இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. இந்த இறுதிப் போட்டியில் ரச்சின் ரவீந்திரா துவக்கத்தில் அதிரடியாக ஆடினார். 29 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார்.

ரச்சின் ரவீந்திரா தனிப்பட்ட முறையில் சிறப்பான ஆட்டத்தை ஆடிய போதும், இந்திய அணி 252 ரன்கள் என்ற இலக்கை 49 ஓவர்களில் எட்டி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ரச்சின் ரவீந்திரா முதலிடத்தில் இருக்கிறார். அவர் இந்த தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 263 ரன்களை சேர்த்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 65.75 என்பதாக இருந்தது. இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்ததால், அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் குவித்த ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகன் விருதை வாங்க அழைக்கப்பட்டார். அப்போது பேசிய ரச்சின் ரவீந்திரா, "இந்த விருது நிச்சயமாக கசப்பும், இனிப்பும் கலந்த ஒரு விஷயம். நாங்கள் இந்த முறை கோப்பையை வென்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் கிரிக்கெட் ஒரு கொடூரமான விளையாட்டு."
"இது அற்புதமான இறுதிப் போட்டியாக இருந்தது. தனிப்பட்ட முறையில் பலரும் சிறப்பாக ஆடினார்கள். இந்த அணிக்காக விளையாடுவது சிறப்பாக இருந்தது. அணியில் அனைத்து வீரர்களுக்கும் எனது சிறப்பான ஆட்டத்தில் பங்கு உள்ளது. ஒரு தனிப்பட்ட அனுபவ வீரரோ, அறிமுக வீரரோ மட்டும் நன்றாக விளையாடினார் என சொல்ல முடியாது. நாங்கள் ஒரு அணியாக நன்றாகவே விளையாடினோம்" என்று ரச்சின் ரவீந்திரா கோப்பை வெல்லாத சோகத்தில் "கிரிக்கெட் ஒரு கொடூரமான விளையாட்டு" என்றார்.