மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணித் தேர்வின் போது கவுதம் கம்பீர் கேட்ட இரண்டு விஷயங்களை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா மறுத்துவிட்டது தற்போது தெரிய வந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணி தேர்வு கூட்டம் ஜனவரி 18 அன்று மதியம் 12.30 க்கு துவங்கியது.
அப்போதே அணி அறிவிக்கப்படும் என ஊடகங்குளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மதியம் 2:30 மணிக்குத்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரமாக கவுதம் கம்பீருக்கும், அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக துணை கேப்டனாக யாரை நியமிப்பது என்பது பற்றி நீண்ட விவாதம் நடந்ததாக தெரிகிறது. பும்ராவை துணை கேப்டனாக அறிவிக்க வேண்டும் என்ற முடிவு சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், பும்ரா தற்போது காயத்தில் இருப்பதால், அவர் ஆடுவது உறுதியாகவில்லை.
அடுத்த கட்டமாக யாரை துணை கேப்டனாக நியமிப்பது? என்ற கேள்வி எழுந்தது. அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா சுப்மன் கில் பெயரை முன் மொழிந்து இருந்தனர். ஆனால், அதை கவுதம் கம்பீர் ஏற்க மறுத்ததாகவும், ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என அவர் கேட்டதாகவும் தெரிகிறது. ஆனால், அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா அதை மறுத்து விட்டனர்.
அடுத்து மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என கவுதம் கம்பீர் கேட்டு இருக்கிறார். ஆனால், ரிஷப் பண்ட் தான் சரியான தேர்வாக இருப்பார் என அஜித் அகர்கர் திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்த விவாதம் நடந்ததாலேயே அணி அறிவிப்பு தாமதமானதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதும் புஜாராவை அணியில் சேர்க்க வேண்டும் என கவுதம் கம்பீர் கேட்டதாகவும், அதை அஜித் அகர்கர் மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. தற்போதும் கவுதம் கம்பீரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது போன்ற தகவல்களை கம்பீர் தரப்பு தான் கசியவிட்டு அவர் மீது எந்த தவறும் இல்லை என காட்ட முயல்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. சமூக வலைதளங்களில் இது குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.