துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா காயம் காரணமாக இடம்பெறாத நிலையில் முகமது ஷமி மட்டுமே அணியில் இருக்கின்றார். முகமது ஷமியும் கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார்.
இந்த சூழலில் முகமது ஷமியை நம்பியே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு இருக்கிறது. அனுபவ வீரரான முகமது சிராஜுக்கும் இந்திய அணியில் இடம் இல்லை. இதன் காரணமாக முகமது ஷமி, ஹர்ஷித் ரானா என இரண்டு வீரர்கள் மட்டுமே வேகப்பந்து வீச்சில் இருக்கிறார்கள்.

ஹர்திக் பாண்டியா மூன்றாவது ஃபாஸ்ட் பவுலராக உள்ளார். இந்த சூழ்நிலையில் முகமது ஷமி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடும் நெருக்கடியை சந்தித்தார். தாம் வீசிய முதல் ஓவரில் அவர் அதிக அளவு ஓயிடு பால்களை வீசினார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷமி 43 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட்டுகள் ஏதும் எடுக்கவில்லை. முதல் இரண்டு ஓவர்களை ஷமி சரியாக வீசவில்லை என்றாலும் அடுத்து சில ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசி இருந்தார்.
இந்த நிலையில் ஷமிக்கு தேவையில்லாத நெருக்கடி ஏற்படுவதாக அவருடைய உடல் மொழியில் தெரிகிறது. எப்போதுமே ஐசிசி தொடரில் மூன்று அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் இருப்பார்கள். ஆனால் தற்போது ஷமி மட்டும்தான் அனுபவம் நிறைந்த வேகப்பந்துவீச்சாளராக அணியில் இருக்கின்றார். இதுவே அவருக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் பாகிஸ்தானுக்கு எதிராக ஷமி ஏதேனும் சில தவறை இயல்பாகவே செய்தால் அதை சமூக வலைத்தளத்தில் சிலர் பூதாகரமாக விமர்சிக்கிறார்கள்.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது ஷமிக்கு இயல்பாகவே நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக தான் ஷமி துபாயில் அண்மையில் தடுமாறினார். அது மட்டும் இல்லாமல் ஷமி காயத்திலிருந்து தற்போது தான் மீண்டும் வந்துள்ளார். ஆனால் துபாய் கள சூழல் அவருக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கிறது. வெயிலில் தொடர்ந்து விளையாடுவதன் மூலம் அவருடைய உடல் தகுதியும் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இந்திய அணி பலமாக விளங்கினாலும், வேகப்பந்து வீச்சில் ஒரு குறை இருக்கிறது. ஷமி சரியாக செயல்படவில்லை என்றால் இந்திய அணிக்கு அது பெரிய மைனஸ் ஆக மாறிவிடும்.