அகமதாபாத்: 13வது உலகக்கோப்பை தொடரில் முதல் சதம் விளாசி நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கான்வே சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் தொடங்கியுள்ள உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் களமிறக்கப்படவில்லை. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 283 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் கான்வே - யங் கூட்டணி களமிறங்கியது. முதல் ஓவரை வீசிய வோக்ஸ் பந்துவீச்சில் 10 ரன்கள் சேர்க்கப்பட, 2வது ஓவரின் முதல் பந்திலேயே யங் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் கான்வே உடன் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இணைந்தார். 5வது ஓவருக்கு பின் இருவருமே அட்டாக்கை தொடங்கினர். ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்சர் என்று விளாசியதால், இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முடிவெடுக்க திணறினார்.
அதுமட்டுமல்லாமல் இருவருமே இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எந்த லைன் மற்றும் லெந்தில் பந்துவீசுவது என்று தெரியாமல் திணறினர். ஆனால் அதற்குள் கான்வே 36 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். பின்னர் அடில் ரஷீத் மற்றும் மொயின் அலியை இங்கிலாந்து அணி அட்டாக்கில் கொண்டு வந்தது. ஆனால் ஸ்வீப் ஷாட் அடிப்பதில் கில்லியான கான்வே, இருவரையும் பொளந்து கட்டினார். அதிலும் கான்வே அடித்த சிக்சர்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் கான்வே 83 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அதேபோல் நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் சதத்தை விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக 3 ஃபார்மட் போட்டிகளிலும் கான்வே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களில் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் திணறிய கான்வே, உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் சதம் விளாசி அசத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அதே மைதானத்தில் சிறப்பாக ஆடிய கான்வே ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.