அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் மிட்செல் சான்ட்னர் 10 ஓவர்களில் வெறும் 37 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
13வது உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஃபிட்னஸ் பிரச்சனை காரணமாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை.

இதையடுத்து டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் முதல் கடைசி வீரராக களமிறங்கிய மார்க் வுட் வரை அனைத்து வீரர்களும் அட்டாக்கிங் பாணியிலேயே விளையாடினர். இதனால் ஜோ ரூட் மற்றும் பட்லரை தவிர்த்து எந்த வீரராலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
ஆடுகளத்திற்கு ஏற்ப சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 77 ரன்களும், பட்லர் 42 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்தை போல் பிளாட் பிட்ச்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்கள் செயல்படும். இதனால் இந்திய ஆடுகளங்களில் ஒருநாள் போட்டிகளை டி20 கிரிக்கெட்டை போல் விளையாட முடியாது.

ஏனென்றால் ஒரேயொரு தரமான ஸ்பின்னரால் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்ற முடியும். அப்படிதான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நியூசிலாந்து அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் மகுடி வாசித்து பெட்டி பாம்பாக அடக்கியுள்ளார். அட்டாக் செய்து கொண்டிருந்த பேர்ஸ்டோவை சான்ட்னர் வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், ரன்களை கசிய விடாமல் ஒரு பக்கம் தடுத்து நிறுத்தினார்.
இதனால் கிளென் பிலிப்ஸை அட்டாக் செய்ய முயன்று இங்கிலாந்து அணியின் மொயின் அலி மற்றும் ப்ரூக் இருவரும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக 330 ரன்களுக்கு மேல் செல்ல வேண்டிய இங்கிலாந்து அணியின் ஸ்கோரை, எளிதாக சான்ட்னர் மூலமாக நியூசிலாந்து அணி 282 ரன்களுக்குள் நிறுத்தியுள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக நீண்ட ஆண்டுகளாக விளையாடி வரும் சான்ட்னருக்கு இந்திய ஆடுகளங்கள் பெரும்பாலானவை அத்துபடி என்பது குறிப்பிடத்தக்கது.