ஹைதராபாத் : பாகிஸ்தான் அணி இந்தியா வந்தாலே பல பிரச்சனைகள் கிளம்பும். இந்த நிலையில் 2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளதால் பாகிஸ்தான் அணி இந்தியா வர உள்ளது.
முதலில் இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் அதைத் தொடர்ந்து உலகக்கோப்பை போட்டிகளிலும் அந்த அணி பங்கேற்க உள்ளது.
இந்த முறை அந்த அணியின் முதல் உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியே சர்ச்சையுடன் தான் துவங்க உள்ளது.

பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி : ஹைதராபாத் நகரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தன் முதல் பயிற்சிப் போட்டியில் செப்டம்பர் 29 அன்று ஆட உள்ளது. தற்போது இந்தப் போட்டி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பை ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ளது. பிசிசிஐ-யும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
போட்டி தேதியை மாற்ற சொன்ன காவல்துறை : உலகக்கோப்பை போட்டி என்பதோடு பாகிஸ்தான் அணி ஆடுவதால் ஹைதராபாத் காவல்துறையிடம் இந்தப் போட்டிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுள்ளது ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பு. ஆனால், போட்டி நடக்கும் தேதியை ஒட்டி விநாயகர் சிலை கரைப்பு மற்றும் மிலான் உன் நபி விழா ஆகியவை இருப்பதால் போட்டியை வேறு தேதிக்கு மாற்றுமாறு கூறி இருக்கிறது. மேலும், போட்டியை அதே தேதியில் நடத்தினால் காவல்துறை பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் இல்லை : ஏற்கனவே, ஒருமுறை உலகக்கோப்பை அட்டவணையை மாற்றி இருப்பதால் மீண்டும் போட்டியை தேதி அல்லது இடம் மாற்றி சர்ச்சையில் சிக்க விரும்பாத பிசிசிஐ, பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் பயிற்சிப் போட்டியை ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளது.
டிக்கெட் பணம் : ஏற்கனவே, இந்தப் போட்டிக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுக்கான பணத்தை ரசிகர்களுக்கு திரும்ப வழங்குமாறு புக்மைஷோ தளத்திடம் பிசிசிஐ கூறி இருக்கிறது. எனவே, ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட் பணத்தை எளிதாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.