துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று வெளியிட்டது. இதில், இந்தியா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், முதலிடத்தை ஆஸ்திரேலியா பிடித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை அபாரமாக வென்றது. இதனால் ஆஸ்திரேலியா தற்போது 114 பாயிண்டுகளுடன் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதே நேரம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா, 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. விசாகப்பட்டிணத்தில் ஹுட்ஹுட் புயல் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால், நாளை அங்கு நடக்க இருந்த ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த போட்டியுடன் சேர்த்து எஞ்சிய மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தால், இந்தியாவால் இந்த தொடரின் இறுதியில், ஐசிசி பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்க முடியும்.
ஆனால் தற்போது இந்தியாவிடம் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. அவை இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றாலும், 0.02 புள்ளிகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை விட அடுத்த இடத்தைதான் இந்தியாவால் பிடிக்க முடியும். ஹுட்ஹுட் புயலால் இந்தியாவின் ஒருநாள் போட்டிக்கான முதல் ரேங்க் மதிப்பும் தகர்க்கப்பட்டுள்ளது. ஐசிசி பட்டியலில் 2வது இடத்தை தென் ஆப்பிரிக்கா பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.