பெர்த்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் குறிப்பிட்ட ஒரு வீரர் பெரிய தாக்கம் ஏற்படுத்துவார் என டேல் ஸ்டெயின் அடித்துக்கூறியுள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன.
இந்த தொடருக்காக முன்கூட்டியே ஆஸ்திரேலியா சென்றடைந்த இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்தாண்டு சொதப்பிய இந்திய அணி, இந்தாண்டு அசுர பலத்தில் களமிறங்குகிறது. குறிப்பாக பேட்டிங் வரிசையில் கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் என அனைவருமே அட்டகாசமான ஃபார்மில் உள்ளனர். இதனால் எப்படிபட்ட ஸ்கோரையும் எட்ட முடியும் என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் தான் டி20 உலகக்கோப்பையில் கலக்கவுள்ளார் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சூர்யகுமார் யாதவ் ஒரு 360 டிகிரி வீரராக எனக்கு ஏபி டிவிலியர்ஸை நினைவு படுத்துகிறார். தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் உலக கோப்பையில் அசத்தப் போகும் வீரர்களில் நிச்சயம் அவரும் ஒருவராக இருப்பார்.
பந்தின் வேகத்தை சாதகமாக பயன்படுத்தி அடிக்கும் பேட்ஸ்மேன்களில் சூர்யகுமாரும் ஒருவர். குறிப்பாக ஸ்கொயர் திசைக்கு கீழே அடிப்பதற்கு அவர் மிகவும் பிடித்துள்ளது. பெர்த், மெல்போர்ன் போன்ற ஆஸ்திரேலிய களங்களில் அதிகப்படியான வேகம் இருக்கும். அந்த வேகத்தைப் பயன்படுத்தி அவர் பைன் லெக், பிஹைன்ட் உட்பட அனைத்து திசைகளிலும் அதிரடியாக அடிப்பார் என ஸ்டெயின் கூறியுள்ளார்.