
மார்க்கெட்டிங் மேதை
ஒரு தயாரிப்பை எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்பதை டால்மியாவிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கபில் தேவும், கவாஸ்கரும், அஸாருதீனும், சச்சினும் மாங்கு மாங்கென்று விளையாடியதை அவர் பணமாக்கினார். இந்திய கிரிக்கெட்டை அவர் மிகச் சிறந்த பிசினஸாக மாற்றியமைத்தார்.

தொட்டதற்கெல்லாம் பணம்
இந்திய கிரிக்கெட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் பிசினஸாக்கினார். பணமாக்கினார். உலக அளவில் இந்திய கிரிக்கெட்டை வர்த்தக அம்சமாக மாற்றினார். கிரிக்கெட்டை வைத்து இப்படியெல்லாம் கூட காசு பார்க்க முடியுமா என்ற ஆச்சரியத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தினார்.

கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பவர்
இவரது எதிரிகளே கூட இவரது நிர்வாக, வர்த்தகத் திறமையை மதித்தார்கள். கடலில் தூக்கிப் போட்டாலும் கூட பத்திரமாக வந்து விடுவார் டால்மியா என்று கூறுவார்கள்.

மார்வாடிக் குடும்பம்
40களில் மார்வாடிக் குடும்பத்தில் பிறந்தவர் டால்மியா. கிளப் அளவிலான கிரிக்கெட் ஆடியுள்ளார். விக்கெட் கீப்பராக இருந்தவர். ராஜஸ்தான் மற்றும் ஜோராபகான் ஆகிய இரு அணிகளுக்காக ஆடியுள்ளார். பின்னர் நிர்வாகத்தின் பக்கம் திரும்பினார்.

குரு பிஸ்வநாத் தத்
பிசிசிஐ தலைவராக முன்பு இருந்த பிஸ்வநாத் தத்தின் சிஷ்யராக வலம் வந்தவர். தத்தான், டால்மியாவுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்.

1983ல் பொருளாளர்
1983ல் கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளராக விளங்கினார். அப்போதுதான் இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையில் கைப்பற்றி வந்தது.

முதல் முறையாக டிவி உரிமை
அதன் பிறகு டால்மியாவுக்கு வேலை சுலபமானது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வெறித்தனமான ரசனையை காசாக்கினார். டிவிகளில் போட்டிகளை ஒளிபரப்பும் உரி்மையை தனியாருக்குக் கொடுத்தால் பெரும் வருமானம் கிடைக்கும் என்பதை உணர்ந்து அதை செயலாற்றினார். இதற்காக மத்திய அரசுடன் கடுமையாக மோதி சட்ட ரீதியாகவும் வெற்றி பெற்று அனைவரையும் அயர வைத்தார்.

87ல் நடந்த சாதனை
இவருக்குக் கிடைத்த முதல் மிகப் பெரிய வெற்றி என்றால் அது 1987ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டிதான். ரிலையன்ஸ் கோப்பை என்று பெயரிடப்பட்ட அந்தப் போட்டியை இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து நடத்தின. இங்கிலாந்துக்கு வெளியே நடந்த முதல் உலகக் கோப்பைப் போட்டி அது. வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை அது பெற்றது. காரணம், டால்மியாவின் திட்டமிடல்.

ஐசிசிக்கும் பண மழை
இந்திய கிரிக்கெட் வாரியத்தை பணம் கொழிக்கும் அமைப்பாக மாற்றிய டால்மியா, ஐசிசி தலைவராக 3 ஆண்டுகள் இருந்தபோது அந்த அமைப்பையும் பணக்கார அமைப்பாக மாற்றியமைத்தார். அதுவரை பிச்சைக்காரத்தனமாக இருந்து வந்த ஐசிசியை கோடீஸ்வர அமைப்பாக மாற்றியவர் டால்மியாதான்.

டால்மியாவுக்கு செக் வைத்த பவார்
2005 வரை டால்மியாவின் கையில்தான் பிசிசிஐ இருந்தது. அவரைத் தகர்க்க சரத் பவார் கடுமையாக முயன்றார் போராடினார். ஆனால் 2005ல்தான் அவருக்கு வெற்றி கிடைத்தது. முதல் முறையாக டால்மியாவிடமிருந்து நழுவி பவார் கைக்கு வந்தது பிசிசிஐ. அதன் பின்னர் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி டால்மியாவின் ஆதிக்கம் மங்கிப் போனது.

2013ல் மறு பிறப்பு
ஆனால் 2013ல் யாரும் எதிர்பாராத வகையில் சீனிவாசன் புண்ணியத்தால் மீண்டும் பிசிசிஐ தலைவரானார் டால்மியா. இடைக்காலத் தலைவராக டால்மியாவை நியமித்தார் சீனிவாசன். தற்போது டால்மியாவின் சகாப்தம் நிரந்தரமாக முடிவுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











