மும்பை : பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டானிஷ் கனேரியா, இர்பான் பதானுக்கு ட்விட்டரில், பாகிஸ்தான் ஹிந்துக்களை பற்றியும் பேசுங்கள் என கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை குறிப்பிட்டு டானிஷ் கனேரியா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இர்பான் பதான், காசாவில் ஒன்றும் அறியாத குழந்தைகளை கொன்று குவித்து வருவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அந்த பதிவின் கீழ், கனேரியா தனது கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இர்பான் பதான் தன் பதிவில், "தினமும், 0 - 10 வயது வரை உடைய அப்பாவி குழந்தைகள் காசாவில் தங்கள் உயிரை இழந்து வருகிறார்கள். ஆனால், இந்த உலகம் அமைதியாக இருக்கிறது. ஒரு விளையாட்டு வீரராக நான் இதை சொல்ல தான் முடியும். ஆனால், உலக தலைவர்கள் ஒன்று சேர்ந்து இந்த முட்டாள்தனமான கொலைகளை தடுக்க வேண்டும்" எனக் கூறி இருந்தார்.
அதன் கீழ், டானிஷ் கனேரியா தன் பதிவில், "இர்பான் சகோதரரே, குழந்தைகளின் வலியை நீங்கள் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன். நானும் உங்களுடன் நிற்கிறேன். அதே சமயம், பாகிஸ்தான் ஹிந்துக்களை பற்றியும் பேசுங்கள். பாகிஸ்தானிலும் நிலைமை அதே போலத் தான் உள்ளது." எனக் கூறி இருக்கிறார்.
டானிஷ் கனேரியா பதிவுக்கு பாகிஸ்தான் நாட்டினர் பலர் "அவர் சொல்வது உண்மை அல்ல" என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அதே போல, இர்பான் பதான் பதிவிற்கு சிலர், "இரு பக்கம் நடந்ததையும் பேச வேண்டும்" எனக் கூறி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
டானிஷ் கனேரியா பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் ஹிந்து என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சிறந்த ஸ்பின்னராக வலம் வந்தார். எனினும், அவருக்கு இடையே அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடி வந்தார்.
அப்போது அவர் மீது மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தது. இதை அடுத்து அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பால் தடை செய்யப்பட்டார். அவர் மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை என கனேரியா தன் வாதத்தை முன் வைத்து வருகிறார். தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், அந்த நாட்டு கிரிக்கெட் அமைப்பையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.