சிட்னி: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மிகுந்த சவாலானதாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் தெரிவித்துள்ளார்.
5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது மகேந்திரசிங் டோணி தலைமையிலான இந்திய அணி. முதல் ஒருநாள் போட்டி 12ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீமேன் நிருபர்களிடம் கூறியதாவது: டோணி அணி வலிமையானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உலக கோப்பையின் அரையிறுதிவரை வந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அதுபோன்ற ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
ஆஸ்திரேலியாவும், சிறப்பான வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே இவ்விரு அணிகள் நடுவேயான போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவ்வாறு லீமேன் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.