வெலிங்டன்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா காட்டிய அதிரடியைவிடவும், அந்த அணி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் மைதானத்திற்குள் பிரவேசித்த விதத்தைதான் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள்.
வெலிங்டனில் இன்று யு.ஏ.இ மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப் பரிட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 341 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லர் 48 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து, அவுட் ஆனார். ஒரு ரன்னில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஆனால், இதைப்பற்றியெல்லாம் யார் பேசுகிறார்கள்?, டேவிட் மில்லரின் பேட்டிங் பற்றி பேசுவதைவிட, அவரின் ஜம்பிங் பற்றிதான் சமூக வலைத்தளங்கள் அதிகமாக கவலைப்படுகின்றன.
ரில்லே ரோச்சவ் அவுட் ஆனதும், 4வது விக்கெட்டாக களமிறங்கினார் டேவிட் மில்லர். ஆனால், வீரர்கள் வரும் வரிசையில் பாதிவரை நடந்து வந்த மில்லர், திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பவுண்டரி எல்லையை அடுத்த தடுப்பு சுவரை தாண்டி குதித்தார். மில்லரின் இந்த திடீர் நடவடிக்கையை பார்த்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.
ஏன் இப்படி குதித்தார் என்பதை பற்றியெல்லாம் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் அவரது ரசிகர்களோ, அவர் ஒரு புலி, இல்லையில்லை.. சிங்கம் என்கிற ரேஞ்சுக்கு புகழ்ந்து வருகின்றனர். ஆனால் கேலி பேர்வழிகளோ, ஒருவேளை ஒழுங்கான பாதையில் நடந்து வந்திருந்தால், அரை சதம் அடித்திருப்பார் என்று நக்கல் செய்கின்றனர்.