டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்.. பழிதீர்க்க நேரம் வந்ததா??.. ரசிகர்கள் உற்சாகம்!
மும்பை: ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் சூழலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். பழிவாங்குவதற்கு சரியான நேரம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
2023ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி வரும் மார்ச் 31ம் தேதியன்று அகமதாபாத்தில் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இறுதிப்போட்டி மே 28ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் முதற்கட்ட பயிற்சிகளுக்காக ஏற்பாடு செய்து வருகின்றன. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே அகமதாபாத்தில் பயிற்சி முகாமை தொடங்கிவிட்டது.

ஐபிஎல் 2023 தொடர்
அனைத்து அணிகளும் வீரர்களை தயார்படுத்த தொடங்கிய சூழலில் ஐதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் கேப்டனையே அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்தியாவில் பெரும் மவுசு உள்ளது.

கேப்டன்சி அனுபவம்
கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு கடந்த மாதம் கார் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியவில்லை. எனவே அணியை வெற்றிகரமாக வழிநடத்தி செல்ல டேவிட் வார்னரை போன்ற அனுபவ வீரரை தேர்வு செய்துள்ளனர். வார்னர் ஏற்கனவே ஐபிஎல்-ல் ஐதராபாத் அணியை வழிநடத்தி கோப்பை வென்றுக்கொடுத்த அனுபவம் இருக்கிறது. அணியின் துணைக்கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பழிதீர்க்கப்படுமா?
கடந்த 2021ம் ஆண்டு ஐதராபாத் அணி நிர்வாகத்திற்கும் அதன் கேப்டனாக இருந்த வார்னருக்கும் மனகசப்பு ஏற்பட்டது. பொதுவெளியிலேயே இந்த பிரச்சினை வெடித்ததால் ஒரு தரமான வீரர் என்றும் பார்க்காமல் அதிரடியாக அந்த அணி நீக்கியது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐதராபாத் அணியை வார்னர் பழிவாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத்தின் கேப்டன்
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனையும் இந்தாண்டு கழட்டிவிட்டது. இதனையடுத்து தற்போது புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரமை தேர்வு செய்துள்ளனர். சமீப காலமாக தென்னாப்பிரிக்காவுக்காக மார்க்ரமின் ஃபார்ம் மிகச்சிறப்பாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications