
டேவிட் வார்னர் தொடர் நாயகன்
ஆனால் அனைத்து பேச்சுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் டி20 அணி தரவரிசையில் 7-ம் இடத்தில் அமர்ந்திருந்த ஆஸ்திரேலியா இப்போது கோப்பையை வென்று சாதித்துள்ளது. ஆஸி கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் அணியின் ஓப்பனிங் வீரர் டேவிட் வார்னர். இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 289 ரன்கள் எடுத்து 'டி20 2021 உலககோப்பை' தொடர் நாயகன்(player of the tournament) விருதை பெற்றுள்ளார். இதில் 3 அரைசதமும் அடங்கும்.

ஐ.பி.எல்.லில் அவுட் ஆப் பார்ம்
வார்னருக்கு இந்த உலக்கோப்பை தொடர் மிகவும் மறக்க முடியாததாகி விட்டது. ஏனெனில் சுமார் 1 மாதத்திற்கு முன்பு இதே ஐக்கிய அரபு அமீரகத்தில் வார்னரின் நிலை என்னவென்று அனைவருக்கும் தெரியும். இங்கு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் முதலில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் டேவிட் வார்னர். ஒரு மேட்சிலும் வார்னர் சரியாக ஆடவில்லை. அணியும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இதனால் அவரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது ஹைதராபாத் அணியின் உரிமையாளரான சன் நிர்வாகம். ஐ.பி.எல் தொடரில் 8 மேட்ச்களில் விளையாடி 170 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் வார்னர்.

விமர்சன கணைகள்
கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கபட்டார். இதனை தொடர்ந்து கடைசி மூன்று, நான்கு போட்டிகளில் வார்னருக்கு அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. மேலும், ஹைதராபாத் அணி விளையாடிய நாட்களில் வார்னர் மைதானத்துக்கு அழைத்து வரப்படாமல் ஹோட்டலிலேயே தங்க வைத்து அவமானப்படுத்தப்பட்டார். ''வார்னர் டிக்டாக் செய்வதற்கு மட்டுமே சரிப்பட்டு வருவார். விளையாட மாட்டார்'' என்று விமர்சன கணைகள் பாய்ந்தன.

நிரூபித்த வார்னர்
ஆனால் இப்போது அவமானங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி, விமர்சனங்களை எல்லாம் தூள், தூளாக்கி ஹைதராபாத் அணி நிர்வாகத்துக்கும் சரியான பதிலடி கொடுக்கும் வகையில் தான் யார் என்பதை நிரூபித்துள்ளார் வார்னர். இதற்காக வார்னரை தற்போது டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











