மொஹாலி : ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் டேவிட் வார்னர், இந்திய அணி வீரர் ஜடேஜாவை போட்டி முடிந்த உடன் கை குலுக்க வந்த போது தலையில் அடித்து இருக்கிறார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் என்றாலே கொஞ்சம் எல்லை மீறி நடந்து கொள்வது வாடிக்கைதான். அது போன்ற ஒரு சம்பவம் தான் இப்போதும் நடந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பல ஆல் - ரவுண்டர்களை சேர்த்து பத்து பேட்ஸ்மேன்களை வைத்திருந்தும் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அடுத்து ஆடிய இந்திய அணியின் நான்கு வீரர்கள் அரைசதம் அடிக்கவே இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை நின்ற அணியின் கேப்டன் கே எல் ராகுல் வெற்றியை உறுதி செய்தார்.
ஜடேஜாவும் இந்திய அணி வெற்றி பெற்ற போது ராகுலுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி வெற்றி பெற்ற பின் ராகுலும், ஜடேஜாவும் களத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்களுடன் கை குலுக்கினர்.
அப்போது டேவிட் வார்னர் கை குலுக்கி விட்டு, ஜடேஜாவின் தலையில் ஹெல்மட் இருந்த நிலையில் அதன் மீது அறைவது போல அடித்தார். அந்த வீடியோ இணையத்தில் பரவத் துவங்கியது.
சிலர் வார்னர் நட்பு ரீதியாக ஜடேஜாவை அப்படி அடித்தார் என கூறி வருகின்றனர். ஆனால், சிலர் வார்னர் மரியாதை இன்றி இப்படி நடந்து கொண்டார் என குற்றம் சுமத்தி வருகின்றனர். ஏற்கனவே, வார்னர், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் டெஸ்ட் தொடர்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
மேலும், பால் டேம்பரிங் செய்து போட்டிகளில் ஆட தடை செய்யப்பட்டு பின் மீண்டு வந்து கிரிக்கெட் ஆடி வருகிறார். ஆனாலும், சில சமயம் அவர் மைதானத்தில் எல்லை மீறி நடந்து கொள்கிறார். அதைக் காட்டுவது போலத் தான் இந்த சம்பவமும் அமைந்துள்ளது. தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் மட்டுமே நல்ல பார்மில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் அந்த அணி மோசமான தோல்விகளை அடைந்து வருகிறது.
இந்தியா வருவதற்கு முன் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கே அந்த அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அடுத்த மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து 2 - 3 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது.