
2வது டெஸ்ட்
ஓப்பனிங் வீரரான டேவிட் வார்னர், தனது 100வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் ஏமாற்றம் கொடுக்காமல் சதம் அடித்து அசத்தினார். ஒருபுறம் விக்கெட்கள் சரிய மறுபுறம் தூண் போல நிலைத்து நின்று சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் 1089 நாட்கள் ( 3 வருடங்களாக ) ஒரு டெஸ்ட் சதம் கூட அடிக்கவில்லை என்ற காத்திருப்பு முடிவுக்கு வந்தது. இது நடந்த சிறிது நேரத்திலேயே மகிழ்ச்சியை இரட்டிப்பும் ஆக்கினார்.

சாதனை சதம்
தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். 254 பந்துகளை எதிர்கொண்டு, 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் இந்த இரட்டை சதம் அடிக்கப்பட்டது. இதன் மூலம் 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முதலில் குயிண்டன் டிக்காக் இந்த சாதனையை படைத்திருந்தார்.

ஒரே நிமிடத்தில் சோகம்
இந்நிலையில் சாதனை படைத்த அடுத்த நிமிடமே சோக சம்பவமும் அரங்கேறியது. சதமடித்ததன் கொண்டாட்டத்தில் ஈடுபட விரும்பிய வார்னர் தனது வழக்கமான ஸ்டைலில் நீண்ட உயரத்திற்கு எகிறி குதித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் வேகமாக காலை கீழே வைத்ததால் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் களத்திலேயே அமர்ந்துவிட்டார்.

அவசர சிகிச்சை
இதனையடுத்து அவசர அவசரமாக உள்ளே வந்த அணியின் பிசியோதெரபிஸ்ட்கள் வார்னரை பெவிலியனுக்கு அழைத்துச்சென்றனர். அவர் இதற்கு மேல் ஆட முடியாது என்பதால் ரிட்டயர்ட் அவுட் எனக்கொடுக்கப்பட்டது. உற்சாகத்தில் ஆழ்ந்திருந்த மைதானமே ஒரு நிமிடத்தில் மௌனமாக கவலையில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











