மெல்போர்ன் : 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை என இரண்டு பிரிவிலும் சாம்பியன் பட்டம் வாங்கிய ஆஸ்திரேலிய அணி t20 உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க நினைத்தது. ஆனால் இந்திய அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் காரணமாக ஆஸ்திரேலிய அணி அரை இறுதிச் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி சார்பாக களமிறங்கிய டேவிட் வார்னர், இந்த தொடர் முடிவடைந்த உடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் ஆறு மாதத்தில் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணிகளும் இப்போதே அணியை கட்டமைக்கும் பணியை தொடங்க இருக்கிறது. இந்த சூழலில் தான் ஓய்வு பெற்றிருந்தாலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று டேவிட் வார்னர் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி வார்னர் இனி ஆஸ்திரேலிய அணிக்காக பரிசீலனை செய்யப்பட மாட்டார் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை அவர் ஓய்வு பெற்று விட்டார். அவருடைய சாதனைகளுக்கும் சேவைகளும் கொண்டாடப்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டிய ஜார்ஜ் பெய்லி, கண்டிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கான திட்டத்தில் டேவிட் வார்னர் இல்லை என்று கூறினார்.
மேலும் டேவிட் வார்னர் எப்போது ஜோக் அடிப்பார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது. இன்னும் காலம் செல்ல ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் எவ்வளவு பெரிய சிறந்த வீரராக இருந்தார் என்பது ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார். இதேபோன்று மேத்தீவ் வேட் உள்ளிட்ட வீரர்களும் அணியில் திரும்ப வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது என்று ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார். டேவிட் வானர் ஓய்வு பெற்ற நிலையில் அந்த இடத்திற்கு (ஐபிஎல் டெல்லி வீரர்)ஜாக் பிரேசர் களமிறங்க கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.