நியூயார்க்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், மாபெரும் கிரிக்கெட் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். உலகிலேயே எந்த வீரரும் செய்யாத பீல்டிங் சாதனையை செய்து அசத்தியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய வீரராக பெரும் புகழ்பெற்ற டேவிட் வார்னர், கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு பல நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது; எந்த அணியும் அவரை ஏலத்தில் வாங்கவில்லை.

அதேசமயம் டேவிட் வார்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரில் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை. அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அங்கு டேவிட் வார்னர் சியாட்டில் ஆர்காஸ் என்ற அணிக்காக விளையாடி வருகிறார். இந்தத் தொடரிலும் ஐந்து போட்டிகளில் அவர் ஒரு அரைசதத்தை கூட அடிக்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க, நேற்று நடந்த போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிராக அவர் இரண்டு கேட்சுகளைப் பிடித்தார். பின் ஆலன் (Finn Allen) மற்றும் ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆகிய இருவரின் கேட்சுகளைப் பிடித்தார். இது டி20 கிரிக்கெட்டில் அவரது 200-வது கேட்ச் ஆக அமைந்தது. இதன் மூலம் அவர் உலக சாதனை படைத்திருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் என இரண்டிலும் தலா 200 அல்லது அதற்கும் அதிகமான கேட்சுகளுக்கும் அதிகமாக பிடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார் டேவிட் வார்னர். அவர் இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் 383 போட்டிகளில் விளையாடி 223 கேட்சுகளைப் பிடித்திருந்தார்.
தற்போது டி20 கிரிக்கெட்டில் 200 கேட்சுகளைப் பிடித்துள்ளார். இந்த சாதனையை உலகில் வேறு எந்த வீரரும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னரின் சியாட்டில் ஆர்காஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.