'டே நைட் டெஸ்ட்'தான் கிரிக்கெட்டோட எதிர்காலமே.. சொல்கிறார் கடந்த கால ஜாம்பவான் பூன்!
மும்பை: எதிர்கால கிரிக்கெட்டில் முக்கியமாக திகழப் போவது பகல் இரவு டெஸ்ட் போட்டிகள்தான் என்று முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் பூன் கூறியுள்ளார்.
அந்தக் காலத்தில், குண்டா, குட்டையா இருந்த டேவிட் பூனை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த மீசை, தொப்பையோடு இருந்தாலும் அசகாயமாக பந்தை அடித்து நொறுக்கி சதம் போடும் அந்த ஸ்டைல்.. பூனின் பிரிக்க முடியாத அம்சங்கள்.
அந்தக் காலத்து செம வீரர்களில் ஒருவராக வலம் வந்தவர் டேவிட் பூன். ஆஸ்திரேலியாவுக்கு அருமையான பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவரும் கூட. ஆலன் பார்டர் காலத்து ஆள்தான் டேவிட் பூன்.

மும்பையில் பூன்
மும்பைக்கு பூன் வந்திருந்தார். அவரும் ரிக்கி பான்டிங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பிடிஐக்கு பேட்டி அளித்தார் டேவிட் பூன். அந்த பேட்டியின்போது பகல் இரவு டெஸ்ட் போட்டி குறித்து விரிவாகப் பேசினார் டேவிட் பூன்.

எதிர்காலமே இதுதான்
பூன் கூறுகையில் கிரி்க்கெட்டின் எதிர்காலமே பகல் இரவு டெஸ்ட் போட்டிகள்தான். இந்த பார்மட்டை முடிந்தவரை அனைவரும் பிரபலப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுதான் புகழ் பெற்று இருக்கப் போகிறது, ஆதிக்கம் செலுத்தப் போகிறது.

எனக்கு நம்பிக்கை இருக்கு
பகல் இரவு டெஸ்ட் போட்டிகள்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். பகல் இரவு ஒரு நாள் போட்டிகள் ஏற்படுத்திய புரட்சியைப் போல இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டிகளும் புரட்சி படைக்கும். அடுத்த கட்டத்திற்கு கிரிக்கெட்டை இது கொண்டு செல்லும் என்றார் பூன்.

முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே உலகின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது என்பது நினைவிருக்கலாம். இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடமும் நல்ல ஆதரவு காணப்பட்டது. அடிலைடில் நடந்த அப்போட்டியில் இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்பட்டது. அப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் போட்டி 3 நாட்களிலேயே முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications