டெல்லி : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க ப்ரித்வி ஷா தவறுதலாக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார். அவர் அடித்த பந்தை நூர் அஹ்மத் கேட்ச் பிடித்ததாகக் கூறி அவருக்கு அவுட் தரப்பட்டது. அவருக்கு அவுட் தரும் முன் அந்த கேட்ச் பிடிக்கப்பட்ட காட்சிகளை அம்பயர் பார்த்த போது அது பிட்ச் ஆன பின் கேட்ச் பிடிக்கப்பட்டது போல இருந்தது. ஆனாலும், வேறு கேமராவில் பார்த்த போது கை பந்துக்கு கீழே இருப்பது போல இருந்தது. இதை அடுத்து அவுட் தரப்பட்டது.
ஆனால், அதை ஒப்புக் கொள்ளாத சில முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அது கேட்சே இல்லை என கூறி வருகின்றனர். சில ரசிகர்கள் அந்த காட்சியில் கேட்ச் பிடிக்கும் முன் பந்து பிட்ச் ஆன காட்சிகளை மட்டும் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சந்தீப் வாரியார் வீசிய நான்காவது ஓவரின் இரண்டாவது பந்தில் துவக்க வீரர் ஜேக் பிரேசர் நூர் அஹ்மத் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் அதே நூர் அஹ்மத்திடம் கேட்ச் கொடுத்து ப்ரித்வி ஷா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதில் தான் சர்ச்சை வெடித்து இருக்கிறது.
ப்ரித்வி ஷா 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆகி இருந்தார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது டெல்லி அணி. அதன் பின் அக்சர் பட்டேல் 43 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அணியை மீட்டார். மறுபுறம் ரிஷப் பண்ட் கேப்டனாக சிறப்பாக பேட்டிங் செய்தார். கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் சேர்த்த அவர் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 224 ரன்கள் குவித்தது.
அடுத்து சேஸிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 220 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.