உத்தப்பா பேட்டிங்
3.5வது ஓவரில் கொல்கத்தா அணியின் ராபின் உத்தப்பா பேட்டிங் செய்ய நின்று இருந்தார். அப்போது டெல்லி அணியின் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டே, இந்த பந்து ஃபோர் போகும் என கூறியதாக ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது.
புகார்
அந்த பந்தில் ராபின் உத்தப்பா ஃபோர் அடித்தார். இதனால், இந்த வீடியோ வேகமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவியது. பல ரசிகர்கள் ரிஷப் பண்ட் எப்படி அந்த பந்து ஃபோர் போகும் என முன்பே கூறினார். இந்த ஐபிஎல் போட்டி மேட்ச் பிக்ஸிங் செய்யப்பட்டது என ரசிகர்கள் புகார் கூறி வந்தனர்.
முழுமையானது அல்ல
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்திக்குறிப்பில். "அந்த குறிப்பிட்ட வீடியோ காட்சி முழுமையானது அல்ல. ரிஷப் பண்ட் அந்த வாக்கியத்திற்கு முன் என்ன கூறினார் என்பதை யாருமே கேட்கவில்லை" என தெரிவித்தார்.
பீல்டிங் தொடர்பானது
மேலும், அவர். "அவர் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம், ஃபோர் போகும் வாய்ப்பை தடுக்க, ஆஃப்-சைடில் பீல்டர்களை அதிகரிக்குமாறு கூறினார்." என விளக்கம் அளித்தார். ராபின் உத்தப்பா அந்த பந்தில் கவர் திசையில் ஃபோர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமானது எங்கே?
இதுபோல அரைகுறையாக ஒரு இளம் வீரர் மீது குற்றம்சாட்டுவது துரதிர்ஷ்டவசமானது என கூறினார் அந்த அதிகாரி. பிசிசிஐ அதிகாரி இப்படி தெரிவித்தாலும், பிரச்சனை ஆரம்பமானது எங்கே என்றால், சில ரசிகர்கள் வெளியிட்ட அந்த குறிப்பிட்ட வீடியோ காட்சிகள், காபிரைட் பிரச்சனை காரணமாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது.
விளக்கம் எங்கே?
அது இந்த விவகாரத்தில் ரசிகர்களை மேலும் சந்தேகமடைய வைத்தது. மேலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக யாரும் இது அரைகுறை வீடியோவால் எழுந்த சர்ச்சை என விளக்கம் அளிக்கவில்லை.