டெல்லி: கேகேஆர் அணியின் அனுகுல் ராய் அடித்த ஷாட்டை, ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த டெல்லி அணியின் சமீரா அசாத்தியமாக கேட்ச் பிடித்து ஆச்சரியம் கொடுத்துள்ளார். ஏற்கனவே சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கமிண்டு மெண்டிஸ் கேட்ச் ஆச்சரியத்தை கொடுத்த நிலையில், தற்போது மற்றொரு இலங்கை வீரரான சமீரா மீண்டும் ஒரு அசத்தல் கேட்சை பிடித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை விளாசியது. கடைசி 5 ஓவர்களில் கேகேஆர் அணி வெறும் 45 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இந்த போட்டியின் கடைசி ஓவரை மிட்சல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தில் ரோவ்மன் பவல் 5 ரன்களில் ஆட்டமிழக்க, உடனடியாக அனுகுல் ராய் களமிறக்கப்பட்டார். அவருக்கு மிட்சல் ஸ்டார்க் யார்க்கர் பந்தை வீசினார். அந்த பந்தை நேராக அனுகுல் ராய் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி பறக்கவிட்டார். இதனால் அனைவரும் சிக்ஸ் என்று நினைத்தனர்.
ஆனால் அந்த திசையில் ஃபீல்டிங் நின்றிருந்த சமீரா, விரைவாக ஓடி இடதுபக்கமாக காற்றில் பறந்து அற்புதமான கேட்சை பிடித்து அசத்தினார். சரியான நேரத்தில் ஜம்ப் செய்த சமீரா, காற்றில் இருந்தவாறு இரு கைகளாலும் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த கேட்சை பார்த்த டெல்லி அணியின் அத்தனை வீரர்களும் ஒரு நொடி ஸ்டன்னாகி நின்றனர்.
சமீரா என்ன செய்தார் என்பதை நம்ப முடியாமல் ரசிகர்கள் ரீப்ளேவிற்காக காத்திருந்தனர். இதன்பின் ரீப்ளேவில் பார்த்த அனைவரும், இந்த சீசனின் மிகச்சிறந்த கேட்ச் இதுதான் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு அணியாலும் ஏராளமான கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டுள்ளன. சுமார் 130க்கும் அதிகமான கேட்ச்கள் கோட்டைவிட்டதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இலங்கை அணியின் இரு வீரர்களும் சிறந்த கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளனர். சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டிவால்ட் பிரெவிஸ் கொடுத்த கேட்சை கமிண்டு மெண்டிஸ் அபாரமாக கேட்ச் பிடித்தார். தற்போது கேகேஆர் அணிக்கு எதிராக டெல்லி அணியின் சமீரா அற்புதமான கேட்ச் பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.