டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது.
இதன் மூலமாக கேகேஆர் அணி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என்று 9 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக விளையாடவுள்ள 4 போட்டிகளில் கேகேஆர் அணி வெற்றி பெற்றால், அந்த அணியால் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றிக்கு பின் கேகேஆர் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே பேசுகையில், கைவிரல்களில் ஏற்பட்ட காயம் பெரிதல்ல. விரைவில் குணமாகிவிடும் என்று நம்பிகிறேன். இந்த போட்டியில் 13 ஓவர்களுக்கு பின் சுனில் நரைன் வீசிய 2 ஓவர்கள் ஆட்டத்தை மொத்தமாகவே மாற்றிவிட்டது. அவர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய பின், எங்களின் கைகள் ஓங்கியது. இந்த பிட்சில் 204 ரன்கள் குவித்தது சிறந்த விஷயம்தான்.
ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நாங்கள் 15 ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். ஆனால் பவுலிங்கில் ரஸ்ஸல், அனுகுல் ராய் மற்றும் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டனர். இந்த மைதானத்தில் அனுகுல் ராய் ஒவ்வொரு முறையில் ஆச்சரியப்படுத்தி வருகிறார். இந்த வெற்றியால் உடனடியாக அதிகமாக சிந்திக்கவில்லை.
ஒவ்வொரு போட்டியாகவே கவனம் செலுத்தி வருகிறோம். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியால், அடுத்த போட்டிக்கான நம்பிக்கையை எடுத்து கொண்டு முன்னேறுவோம். சுனில் நரைன் கேகேஆர் அணிக்கு எப்போதும் சாம்பியன் பவுலர். பல்வேறு தருணங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரும் வருண் சக்கரவர்த்தியும் எங்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சி.
ஏனென்றால் பவுலிங்கில் என்ன சிக்கல் வந்தாலும், அவர்களிடம்தான் செல்கிறேன். சுனில் நரைனை பொறுத்தவரை பயிற்சிக்கு முதல் ஆளாக இருப்பார். மணிக்கணக்கில் பவுலிங் செய்யும் அவர், பின்னர் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபடுவார். ரஸ்ஸலும் பவுலிங்கில் தனது உழைப்பை கொடுத்து வருகிறார். வலைப்பயிற்சியில் அவ்வளவு யார்க்கர்களை வீசுகிறார். ஒரு அணியாகவே அவருக்கு ஆதரவு நிற்போம். இந்த சீசனில் ரஸ்ஸல் பவுலிங் செய்ய வரும் போதெல்லாம், எங்களுக்கு விக்கெட் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.