டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவுக்கு முதல் ஓவரிலேயே முடிவுரை எழுதினார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிரடி துவக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கிர்க்.
டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்றது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். பொதுவாக ஐபிஎல் தொடரில் இரவு நேரப் போட்டிகளில் இரண்டாவதாக பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வார்கள்.

ஆனால், பகல் நேரப் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்வது பெரும்பாலும் சாதகமான முடிவாக இருக்கும். குறிப்பாக பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்களில் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவித்த பின், சேஸிங் செய்யும் எதிரணியை ரன் ரேட் அழுத்தத்துக்கு உள்ளாக்கி வெற்றி பெறலாம்.
ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ஜேக் முதல் ஓவரிலேயே பந்தை பறக்க விட்டார். முதல் மூன்று ஓவர்களில் 19, 18, 18 ரன்கள் குவித்தது டெல்லி அணி. அதன் பின் 15 பந்துகளில் எல்லாம் ஜேக் அரைசதம் கடந்தார். அவரது அதிரடியை பார்த்து மும்பை பந்துவீச்சாளர்கள் அரண்டு போனார்கள். பின்னர் அவர் 27 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 11 ஃபோர், 6 சிக்ஸ் அடித்து இருந்தார்.
இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடும் அழுத்தத்துக்கு உள்ளானார். அவர் முகம் சோர்வடைந்து காணப்பட்டது. அது மட்டுமின்றி ஹர்திக் பாண்டியா வீசிய 2 ஓவர்களில் மட்டும் 41 ரன்கள் குவித்து மிரட்டியது டெல்லி அணி. மோசமான டாஸ் முடிவு மற்றும் பந்துவீச்சை பதிவு செய்து சொதப்பினார் ஹர்திக் பாண்டியா.