DC vs RCB: பெரும் அவமானத்தை தவிர்த்த அபிஷேக் போரல்.. ஆர்சிபி பந்துவீச்சில் சரிந்த டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையிலான சாதனைகள் அனைத்தும் தவிடுப்பொடியாகி, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது சொந்த மண்ணிலேயே மிக மோசமான இன்னிங்ஸை பதிவு செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 39-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி எடுத்த ரன்களைப் பார்த்தால், இது டி20 போட்டியா அல்லது உள்ளூர் பயிற்சியாட்டமா என்று ரசிகர்கள் குழம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு பெங்களூரு அணியின் பந்துவீச்சு அனல் பறந்தது.
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கியது முதலே டெல்லி அணிக்கு பேரிடியாக அமைந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே சாஹில் பராக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் 1 ரன்னிலும், சமீர் ரிஸ்வி ரன் ஏதும் எடுக்காமலும் ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

ஐபிஎல் வரலாற்றிலேயே யாரும் கண்டிராத வகையில், டெல்லி அணி பவர்பிளே ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களில் ஒரு அணி எடுத்த மிகக்குறைந்த ஸ்கோர் ஆகும். மேலும், டெல்லி அணியின் முதல் 6 பேட்டர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த மொத்த ரன்களின் எண்ணிக்கை வெறும் 7 மட்டுமே. 7 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி, ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனைப் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் டெல்லி பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். புவனேஷ்வர் குமார் 3 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரை மிஞ்சும் வகையில் ஜோஷ் ஹேசில்வுட் 3.3 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார். கேப்டன் அக்சர் படேல் உட்பட 3 முக்கிய வீரர்கள் டக்-அவுட் முறையில் வெளியேறியது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.
ஒரு கட்டத்தில் ஐபிஎல் தொடரின் மிகக்குறைந்த ஸ்கோரான 49 ரன்களைக் கூட டெல்லி தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அபிஷேக் போரல் ஓரளவு தாக்குப்பிடித்து 33 பந்துகளில் 30 ரன்களும், டேவிட் மில்லர் 19 ரன்களும் எடுத்ததால் அந்தப் பெரும் அவமானம் தவிர்க்கப்பட்டது. இறுதியில் 16.3 ஓவர்களில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுயாஷ் சர்மா 4 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 7 ரன்கள் மட்டுமே கொடுத்து கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார்.


Click it and Unblock the Notifications
