டெல்லி: விராட் கோலி மற்றும் கே.எல். ராகுலுக்கு இடையே வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி நிதானமாகவே ஆடியது. 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் கே.எல். ராகுல் அதிகபட்சமாக 39 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அபிஷேக் போரல் அதிரடியாக 11 பந்துகளில் 28 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில் 34 ரன்களும் எடுத்தனர்.

163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட் செய்தது. அந்த அணி துவக்க வீரர் ஜேக்கப் பெத்தேல் (12 ரன்கள்), தேவ்தத் படிக்கல் (0 ரன்) என விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ரஜத் படிதார் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். நான்கு ஓவர்களுக்குள் 26 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில் விராட் கோலி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கே.எல். ராகுலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான்காவது ஓவரின் போது இந்த சம்பவம் நடைபெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஃபீல்டிங் அமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகக் கூறி, விராட் கோலி, கே.எல். ராகுலுடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதை சற்றும் எதிர்பார்க்காத கே.எல். ராகுல் சற்று அதிர்ச்சி அடைந்தாலும், தனது அணியின் பக்கம் இருக்கும் நியாயத்தை அவரிடம் எடுத்துரைத்தார். அதன் பின்னர் விராட் கோலி பேட்டிங் செய்ய சென்றார்.
இருவரும் இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடி வரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் இவ்வாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற போது, விராட் கோலி, ஷிரேயஸ் அய்யரிடமும் கேலி செய்வது போல நடந்து கொண்டார் என பேசப்பட்டது. அதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர்களிடம் விராட் கோலி தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருவது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. விராட் கோலி 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.