டெல்லி: "இது என் கிரவுண்டு, என் வீடு" - கே.எல். ராகுல் முன் செய்து காட்டி பதிலடி கொடுத்திருக்கிறார் விராட் கோலி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கே.எல். ராகுல் பெங்களூருவில் செய்த செயலுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் விராட் கோலி.
இதற்கு முன்பு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அப்போது டெல்லி அணியில் இடம் பெற்று இருந்த கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து சேசிங்கை முடித்து வைத்தார்.

அந்த வெற்றிக்குப் பிறகு, தனது சொந்த ஊரான பெங்களூருவில் தான் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டும் வகையிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஐபிஎல் ஏலத்தில் வாங்கவில்லை என்ற கோபத்தை வெளிக்காட்டும் வகையிலும், அவர் 'இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு' என பேட்டை வைத்து சைகை செய்து காட்டினார்.
அது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த விராட் கோலி தனது சொந்த ஊரான டெல்லியில் வைத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி விட்டு இதேபோல பதிலடி கொடுப்பார் என பேசப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே நடந்துள்ளது.
நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. விராட் கோலி நிதானமாக விளையாடி 47 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். க்ருனால் பாண்டியா அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெல்லியில் வெற்றி பெற்றது.
போட்டிக்குப் பிறகு, கே.எல். ராகுல் 'இது எனது மைதானம்' என சைகை செய்தது போலவே, விராட் கோலியும் அவர் முன் சென்று அதே சைகையை செய்து காட்டினார். ஆனால், இது ஒரு வேடிக்கைக்காகவே என பின்னர் சிரித்துக்கொண்டே கே.எல். ராகுலை அணைத்துக்கொண்டார் விராட் கோலி. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.