டெல்லி: டெல்லி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிவடைந்ததால், சூப்பர் ஓவருக்கு போட்டி கொண்டு செல்லப்பட்டது. அதில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 12 ரன்கள் என்ற இலக்கை, டெல்லி அணி 4 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 188 ரன்களை குவித்தது. டெல்லி அணி தரப்பில் அபிஷேக் போரல் 49 ரன்களையும், அக்சர் படேல் 14 பந்துகளில் 34 ரன்களையும் விளாசினர்.

இதன்பின் ராஜஸ்தான் அணிக்காக சஞ்சு சாம்சன் - ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் ஸ்டார்க் வீசிய 2வது ஓவரிலேயே 19 ரன்கள் விளாசப்பட, அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸ் என்று விளாசி தள்ளினர். இதனால் 5 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 50 ரன்களை சேர்த்தது. அப்போது திடீரென காயம் காரணமாக சஞ்சு சாம்சன் 31 ரன்களில் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி பெவிலியன் சென்றார்.
இதன்பின் வந்த ரியான் பராக் 11 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுபக்கம் ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்பின் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் குறைந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 77 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜெய்ஸ்வால் 51 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் துருவ் ஜுரெல் - ராணா கூட்டணி களத்தில் இருந்தது. ராஜஸ்தான் அணி பவுண்டரி அடித்து 22 பந்துகள் கடந்த நிலையில், அக்சர் படேல் வீசிய 15வது ஓவரில் 6, 4, 4 உட்பட 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த ஓவரில் ராணா கொடுத்த கேட்சை ஸ்டப்ஸ் தவறவிட்டார். இதனை பயன்படுத்தி அதிரடியாக ஆடிய ராணா 26 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இதன்பின் ராஜஸ்தான் வெற்றிக்கு 18 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டார்க் வீசிய ஓவரில் ராணா 51 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து துருவ் ஜுரெல் அதிரடி காரணமாக கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீச ஸ்டார்க் வந்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அதில் ஒரு ரன் எடுக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
டெல்லி அணி தரப்பில் மீண்டும் மிட்சல் ஸ்டார்க் தான் சூப்பர் ஓவரை வீச வந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஹெட்மயர் - ரியான் பராக் களமிறங்கினர். அந்த ஓவரின் 5 பந்துகளில் ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் மற்றும் அடுத்து வந்த ஜெய்ஸ்வால் இருவருமே ரன் அவுட்டாகினார். இதனால் டெல்லி அணி சூப்பர் ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் சர்மா பவுலிங் செய்தார். அதேபோல் டெல்லி அணி தரப்பில் கேஎல் ராகுல் - ஸ்டப்ஸ் கூட்டணி களம் புகுந்தது. முதல் பந்திலேயே 2 ரன்கள் சேர்க்க, 2வது பந்தில் கேஎல் ராகுல் பவுண்டரியை விளாசினார். தொடர்ந்து 3வது 1 ரன் எடுக்கப்பட, 4வது பந்தில் ஸ்டப்ஸ் சிக்ஸ் விளாசி டெல்லி அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் டெல்லி அணி சூப்பர் ஓவர் முறையில் அபார வெற்றியை பெற்றது.