மும்பை: டெல்லி அணியின் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் மும்பையின் தானே அருகே 7 ஏக்கர் நிலம் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் கிடைத்த வருமானத்தில் சுமார் 80 சதவிகிதம் தனது மாமனார் சுனில் ஷெட்டியுடன் இணைந்து நிலத்தில் முதலீடு செய்திருக்கிறார். அதன் மதிப்பு மட்டும் ரூ.9.85 கோடி என்று தெரிய வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கேஎல் ராகுல் தொட்டதெல்லாம் தங்கமாகி வருகிறது. அண்மையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல், தற்போது ஐபிஎல் தொடரிலும் மிரட்டலான ஃபார்மில் ஆடி வருகிறார். இதுவரை டெல்லி அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உட்பட 200 ரன்களை விளாசி இருக்கிறார்.

கடந்த சில சீசன்களை போல் நிதானமாக ஆடாமல், இம்முறை கேஎல் ராகுல் தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டுகிறார். ஓவருக்கு ஒரு பவுண்டரி அடிக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ள கேஎல் ராகுல், சூழலை அறிந்தும் ஜூனியர் வீரர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலின் குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.
அண்மையில் கேஎல் ராகுல் மற்றும் அவரது மனைவி ஆதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நிலையில் கேஎல் ராகுல் அடுத்தடுத்து முதலீடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணி ரூ.14 கோடிக்கு கேஎல் ராகுலை ஒப்பந்தம் செய்தது.
அந்த ரூ.14 கோடியில் சுமார் 80 சதவிகித ஊதியத்தை நிலத்தில் முதலீடு செய்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் தனது மாமனாரான சுனில் ஷெட்டியுடன் இணைந்து மும்பையில் முதலீடு செய்துள்ளார். மும்பையின் தானே மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆனந்த நகர் அருகே 7 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறார். இந்த 7 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.9.85 கோடியாகும்.
இதற்காக முத்திரை தாள் வரியாக மட்டும் ரூ.68.95 லட்சமும், பதிவுத்துறை கட்டணமாக ரூ.30 ஆயிரமும் கட்டப்பட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவு மார்ச் மாதத்திலேயே முடிவடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கேஎல் ராகுலின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.