டெல்லி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை குவித்துள்ளது. டெல்லி அணி அதிரடியாக தொடங்கிய நிலையில், அபிஷேக் சர்மா மற்றும் கேஎல் ராகுலின் நிதான ஆட்டம் காரணமாக ரன் ரேட் குறைந்தது. இதன்பின் அக்சர் படேல் கொடுத்த கேமியோவால், டெல்லி அணி கவுரவமான இலக்கை எட்டியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். டெல்லி மைதானம் சிறிய அளவு கொண்டது என்பதால் ஹை ஸ்கோரிங் ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதன்பின் டெல்லி அணி தரப்பில் மெக்கர்க் - அபிஷேக் போரெல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில், துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் 4, 4, 6, 4, 4, 1 என்று மொத்தமாக அபிஷேக் போரெல் 23 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் டெல்லி அணியின் அதிரடி தொடங்கியதாக பார்க்கப்பட்டது.
தொடர்ந்து ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் மெக்கர்க் 9 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கருண் நாயர் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் அபிஷேக் போரெல் - கேஎல் ராகுல் கூட்டணி இணைந்தது. இருவரும் அதிரடியில் மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, நிதானமாக ரன்களை சேர்த்தனர். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி வெறும் 46 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
இதன்பின் அபிஷேக் போரெல் நிதானமாக விளையாட, கேஎல் ராகுல் ஓவருக்கு ஒரு பெரிய ஷாட்டை ஆடினார். ஆனால் ரன் ரேட் 7 ரன்களுக்கு மேல் செல்லாததால், டெல்லி அணி மீதான அழுத்தம் அதிகரித்தது. அப்போது ஆர்ச்சர் வீசிய பந்தில் கேஎல் ராகுல் 32 பந்துகளில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் டைம் அவுட்டில் களம் வந்த அக்சர் படேல், அபிஷேக் போரெலை கடுமையாக திட்டினார்.
பின்னர் சிக்ஸ் அடிக்க முயன்று அபிஷேக் போரெல் 37 பந்துகளில் 49 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்டப்ஸ் - அக்சர் படேல் கூட்டணி இணைந்தது. அப்போது 15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்களை சேர்த்திருந்தது. அப்போது ஹசரங்கா வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 19 ரன்கள் விளாசப்பட, தீக்சனா வீசிய 17வது ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது.
அதே ஓவரில் அக்சர் படேல் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேற, ஸ்டப்ஸ் - அஷுதோஷ் சர்மா கூட்டணி இணைந்தது. தொடர்ந்து ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் விளாசப்பட்டது. இதன்பின் கடைசி ஓவரை வீச சந்தீப் சர்மா வந்தார். அந்த ஓவரில் 4 ஒய்டு, 1 நோ-பால் உட்பட 19 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் டெல்லி அணி இறுதியாக 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.