டெல்லி: ராஜஸ்தான் அணியின் இளம் வீரர்களுக்கு இடையே நேரடியாக கேப்டன்சிக்காக மோதல் வெடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட்டு வரும் நிலையில், துணைக் கேப்டனாக ரியான் பராக் இருந்து வருகிறார். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அடுத்த கேப்டனாக உருவாகுவதற்கு முயற்சிப்பதாக கூறப்பட்டு வருகிறது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக சூப்பர் ஓவரின் போது களத்திற்கு வரவில்லை. இதனால் மாற்று கேப்டனாக ரியான் பராக் செயல்பட்டார். இதனால் ரியான் பராக் பவுலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.

அங்கிருந்து ரியான் பராக் சென்ற பின் மீண்டும் ஜெய்ஸ்வால் சென்று பவுலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இது ஒவ்வொரு முறையும் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்காக முதல் 3 போட்டிகளில் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். அதனடிப்படையில் ரியான் பராக் துணைக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்த சூழலில் ஜெய்ஸ்வால் தேவையின்றி கேப்டன்சியில் தலையிடுவதாக பார்க்கப்படுகிறது. அண்மையில் ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணி உடனான உறவை முறித்து கொண்ட ஜெய்ஸ்வால், கோவா அணிக்கு இடம் பெயர்ந்துள்ளார். கோவா அணி நிர்வாகம் தரப்பில் கேப்டன்சி வாய்ப்பு வழங்கப்பட்டதால், இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டதாக ஜெய்ஸ்வால் வெளிப்படையாக அறிவித்தார்.
இதன் மூலமாக ஜெய்ஸ்வாலுக்கும் கேப்டனாக வேண்டும் என்ற விருப்பம் இருப்பது தெரிய வந்தது. இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடித்துள்ள ஜெய்ஸ்வால், அடுத்ததாக ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடத்தை பிடிக்க தீவிரமாக இருக்கிறார். அதேபோல் டெஸ்ட் அணியில் அடுத்த துணைக் கேப்டனுக்கான ரேஸிலும் ஜெய்ஸ்வால் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணிலும் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், அடுத்ததாக இங்கிலாந்து செல்லவுள்ளார். அங்கும் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், எளிதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ரேஸில் சுப்மன் கில்லை ஓரம் கட்ட முடியும். அதேபோல் ஐபிஎல் தொடரிலும் ஜெய்ஸ்வால் கேப்டனாக நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஆனால் அதற்கான வாய்ப்பை இதுவரை எந்த அணியும் வழங்கவில்லை. இதனால் ராஜஸ்தான் அணிக்குள் ரியான் பராக் - ஜெய்ஸ்வால் இடையிலான மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. வரும் நாட்களில் இந்த மோதல் இன்னும் கூடுதலாக வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூழலை அறிந்து ராகுல் டிராவிட் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு நல்லது என்று பார்க்கப்படுகிறது.