டெல்லி: டெல்லி அணியின் தொடக்க வீரர் மெக்கர்க் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஃபார்மில் இருக்கிறார். அதில் 5 இன்னிங்ஸில் 2 முறை டக் அவுட்டாகியதோடு, 3 முறை ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். இதனால் டெல்லி அணி நிர்வாகம் அவருக்கு மாற்று வீரரை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அறிமுகமான ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் மெக்கர்க் 9 இன்னிங்ஸில் 330 ரன்களை விளாசி தள்ளினார். முதல் பந்தில் இருந்தே பேட்டினை ஓங்கும் பழக்கம் கொண்ட அவரை கட்டுப்படுத்த முடியாமல் ஏராளமான அணிகளும் திணறின. ஆனால் அந்த ஐபிஎல் தொடருக்கு பின் மெக்கர்க் எந்த லீக் தொடர்களிலும் ரன்களை சேர்க்கவில்லை.

இருந்தாலும் ஐபிஎல் மெகா ஏலத்தில் மெக்கர்கை ரூ.9 கோடிக்கு மீண்டும் டெல்லி அணியே வாங்கியது. இதனால் டெல்லி அணிக்கு இம்முறை பயங்கரமான தொடக்கத்தை மெக்கர்க் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் டெல்லி அணியின் எதிர்பார்ப்பையும், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மெக்கர்க் ஏமாற்றி இருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள மெக்கர்க் வெறும் 55 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதிலும் 2 இன்னிங்ஸில் டக் அவுட்டாகியதோடு, 3 இன்னிங்ஸில் 1, 7, 9 என்று ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் கூட 2 பவுண்டரிகளை விளாசி அதிரடியாக தொடங்கிய அவர், வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கொஞ்சம் கூட என்ன மாதிரியான பந்து வருகிறது, பிட்ச் எப்படி செயல்படுகிறது, ஃபீல்ட் செட் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் மெக்கர்க் பேட்டிங் செய்து வருகிறார். இதன் காரணமாக மெக்கர்க் ரன்கள் குவிக்க முடியாமல் ஆட்டமிழக்கிறார். இதனை அனைத்து அணிகளும் புரிந்து கொண்டு அவருக்கான எளிய திட்டத்துடன் வந்து விக்கெட்டை வீழ்த்தி வருகிறார்கள்.
இதனால் டெல்லி அணி நிர்வாகம் இவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்வதற்கான நேரம் வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. இவருக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட டூ பிளசிஸ் காயம் காரணமாக பெஞ்சில் இருப்பதால், டோனவன் ஃபெரேரா போன்ற வீரரை சோதனை செய்து பார்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.