டெல்லி: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனதால் மிகப் பெரும் கோபத்தை வெளிப்படுத்தினார். காற்றில் குத்துவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சக டெல்லி அணி வீரரான அபிஷேக் போரல் மீது ஏற்பட்ட கோபத்தால் தான் அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என பலரும் கூறி வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய 32-வது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் நிதானமாக ரன் சேர்த்து வந்தது. முதல் விக்கெட்டாக துவக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க் 9 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார்.

அடுத்து மூன்றாம் வரிசையில் கருண் நாயர் களமிறங்கினார். அவர் கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 40 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்திருந்தார். அதனால், இந்த போட்டியிலும் கருண் நாயர் அதிரடியாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அவர் மூன்று பந்துகள் சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். அபிஷேக் போரலுடன் ஏற்பட்ட புரிதல் இன்மையால் இந்த ரன் அவுட் ஏற்பட்டது. டக் அவுட் ஆனதால் ஆடுகளத்தை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறிய கருண் நாயர் ஓய்வறையில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
ஓய்வறைக்கு சென்ற பின் தானாக கத்திக் கொண்டிருந்த கருண் நாயர், பின்னர் காற்றில் குத்துவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அவரை ரன் அவுட் ஆக்கிய அபிஷேக் போரல் பின்னர் 37 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ஆடியதை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 188 ரன்கள் எடுத்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.