டெல்லி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி சூப்பர் ஓவர் மூலம் த்ரில்லிங் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்து சமனில் முடித்தது.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட போது, வெறும் 8 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதன்பின் சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணி 11 ரன்கள் சேர்க்க, அதனை 4 பந்துகளில் அடித்து டெல்லி அணி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக டெல்லி அணி 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இந்த போட்டியில் டெல்லி அணியின் சீனியர் வீரரான கேஎல் ராகுலின் ஆட்டம் விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் மெக்கர்க் மற்றும் கருண் நாயர் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்த பின், கேஎல் ராகுல் பவர் பிளேவிலேயே களம் புகுந்தார். அப்போது அட்டாக் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 32 பந்துகளுக்கு 38 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியது. இதுகுறித்து புஜாரா பேசுகையில், கேஎல் ராகுல் சீனியர் வீரராக இருக்கிறார். அவருக்கு 15 முதல் 20 பந்துகளை ஆடிவிட்டு, அதன்பின் அதிரடியாக விளையாட நினைக்கிறேன். அதே நேரத்தில் கேஎல் ராகுல் கொஞ்சம் அட்டாக் செய்து விளையாட வேண்டும். அவர் ஆட்டமிழந்த நேரத்தில் நன்றாக செட்டிலாகி இருந்தார்.
பிட்சை நன்றாக அறிந்த கேஎல் ராகுல், விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்று ஆடி விட்டதாக நினைக்கிறேன். அவரின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டிருப்பதால், இந்த வரிசையில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கண்டறிந்து வருகிறார். வழக்கமாக பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும். அதேபோல் ரன் ரேட் குறையும் போதும் கொஞ்சம் கூடுதலாக அட்டாக் செய்ய வேண்டும்.
ஆனால் கேஎல் ராகுலின் ஆட்டம் விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்பது போலவே இருந்தது என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ஆடிய 32 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 38 ரன்கள் அடித்திருக்கிறார். பவுண்டரி மூலமாகவே 20 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 28 பந்துகளில் வெறும் 18 ரன்களை மட்டுமே சேர்த்திருப்பதுதான் டெல்லி அணிக்கு சிக்கலாக மாறியது.