டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில், திடீரென இடுப்பை பிடித்து கொண்டு ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறி இருக்கிறார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டதா என்ற ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் ராஜஸ்தான் அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

முதல் ஓவரில் நிதானம் காத்த இருவரும், முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி தள்ளினர். தொடர்ந்து மிட்சல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 4, 6, 4 உட்பட 19 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசினார். தொடர்ந்து ஒவ்வொரு ஓவரிலும் ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் பவுண்டரி, சிக்ஸ் என்று விளாசி தள்ளினார்கள்.
இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை எடுத்திருந்தது. ஆனால் பவர் பிளேவின் கடைசி ஓவரில் 4, 6 என்று விளாசிய சாம்சன், திடீரென இடுப்பை பிடித்து கொண்டு வலியில் துடித்தார். இதன்பின் ராஜஸ்தான் அணியின் பிசியோதெரபிஸ்ட் வந்து மாத்திரை கொடுத்த போதும், சஞ்சு சாம்சனால் வலியை தாங்க முடியவில்லை.
இன்னொரு பந்தை எதிர்கொண்ட அவர், ஓட முடியாமல் கிரீஸிலேயே நின்றார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின் உடனடியாக ரிட்டையர்ட் ஹர்ட்டாகிய சஞ்சு சாம்சன், நேராக பெவிலியனை நோக்கி நடந்து சென்றார். இதனால் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ராகுல் டிராவிட் சோகம் அடைந்தார்.
ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறும் அளவிற்கு சஞ்சு சாம்சனுக்கு என்ன காயம் ஏற்பட்டது என்று ரசிகர்கள் குழம்பி உள்ளனர். ஐபிஎல் தொடருக்கு முன்பாக சஞ்சு சாம்சன் காயம் காரணமாக இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடினார். 3 போட்டிகளுக்கு பின்னரே அவர் விக்கெட் கீப்பிங்கில் ஈடுபட்டார். இதனால் மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு முதுகில் சிக்கல் ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகி இருக்கிறார். தற்போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறி இருக்கிறார். இதனால் அவரின் காயம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று பார்க்கப்படுகிறது.