டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்ததற்கு நட்சத்திர அதிரடி வீரரான ஹெட்மயர் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். கடைசி ஓவரில் ஆட்டம் சூப்பர் ஓவர் சென்றதற்கும், சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்ததற்கு ஒரே காரணமாக ஷிம்ரான் ஹெட்மயர் மட்டுமே காரணமாக பார்க்கப்படுகிறது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி சூப்பர் முறை முறையில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை மட்டுமே எடுத்து சமன் செய்தது.

இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் - ஹெட்மயர் கூட்டணி பேட்டிங் ஆடியது. இதில் முதல் 2 பந்துகளில் 9 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், தேவையில்லாமல் ஒய்டில் ரன் சேர்க்கிறேன் என்று ஹெட்மயர் ஓடினார். இதனால் வேறு வழியின்றி ஓடிய ரியான் பராக் ரன் அவுட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து வந்த ஜெய்ஸ்வாலையும் 2வது ரன் ஓடும் போது ஹெட்மயர் ரன் அவுட்டாக்கினார். அதுமட்டுமல்லாமல் கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வெறும் 23 ரன்களே தேவைப்பட்டது. ராஜஸ்தான் அணியின் கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஹெட்மயருக்கு பின் சுபம் துபே, ஹசரங்கா உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்.
அப்படி இருந்தும் ராஜஸ்தான் அணி 23 ரன்களை எடுக்க முடியாமல் ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றது. அதேபோல் மிட்சல் ஸ்டார்க் தொடர்ச்சியாக யார்க்கர் வீசுகிறார் என்பதை அறிந்தும், கொஞ்சம் கூட மாற்றி யோசிக்காமல் ஒரே ஷாட்டையே ஹெட்மயர் ஆடி கொண்டிருந்தார். கொஞ்சம் கூட ரிஸ்க் எடுத்து ஒரு பந்தை அடித்திருந்தால் கூட எளிதாக ராஜஸ்தான் அணி வென்றிருக்க முடியும்.
ஃபினிஷராக விளையாடும் ஹெட்மயர், கடைசி ஓவரில் 9 ரன்களை கூட அடிக்க முடியாமல் ராஜஸ்தான் அணியை தோல்வியடைய வைத்திருக்கிறார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ராஜஸ்தான் அணியையும், ஹெட்மயரையும் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் ராஜஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு ஹெட்மயரின் மோசமான ஆட்டமும், அவசரமுமே காரணமாக பார்க்கப்படுகிறது.