டெல்லி: ஐபிஎல் விதிகளில் செய்த மாற்றம் காரணமாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளது. பவுலர்கள் பந்துகளில் எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில், நேற்றைய ஆட்டத்தில் மிட்சல் ஸ்டார்க் டெத் ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங் செய்தது ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை மிரள வைத்தது.
கொரோனா பரவலின் போது நடந்த கிரிக்கெட் போட்டிகளில் பந்தில் எச்சில் பயன்படுத்த ஐசிசி சார்பாக தடை விதிக்கப்பட்டது. எச்சில் மூலமாக கொரோனா வைரஸ் பரவலாம் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் பவுலர்கள் டெத் ஓவர்களின் போது ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு கஷ்டப்பட்டனர். இதனால் சில நேரங்களில் வியர்வையை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் எச்சில் அளவிற்கு வியர்வையை ஒவ்வொரு முறையும் பயன்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பந்தில் எச்சில் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அவர் கோரிக்கை வைத்த 2 நாட்களில் ஐபிஎல் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
உடனடியாக ஐபிஎல் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மிட்சல் ஸ்டார்க் எச்சிலை பந்தில் பயன்படுத்தியதன் மூலமாக ரிவர்ஸ் ஸ்விங் செய்ய தொடங்கினார். நிதீஷ் ராணாவுக்கு வீசப்பட்ட ரிவர்ஸ் ஸ்விங்கை பார்த்த ராஜஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் மிரண்டே போயினர்.
அதுமட்டுமல்லாமல் கடைசி ஓவர் மற்றும் சூப்பர் ஓவரில் மிட்சல் ஸ்டார்க் கிட்டத்தட்ட 10 பந்துகள் தரமான யார்க்கரை வீசினார். மிட்சல் ஸ்டார்க் சரியான யார்க்கர் பந்துகளை வீசுவதற்கும், அதனை ரிவர்ஸ் ஸ்விங் செய்ததற்கும் ஐபிஎல் விதி மாற்றமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு மிட்சல் ஸ்டார்க் எளிதாக பவுலிங் செய்து கட்டுப்படுத்துவார்.
இந்த அடிப்படை விஷயத்தை மறந்து மீண்டும் ராஜஸ்தான் அணி ஹெட்மயரை சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய அனுப்பியது. இதனை பயன்படுத்தி தனக்கான ஆங்கில் ஹெட்மயரை ஆட வைத்து மிட்சல் ஸ்டார்க் சாதித்து காட்டியுள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் வரும் நாட்களில் பவுலர்களின் ஆதிக்கம் தொடரும் என்று பார்க்கப்படுகிறது.