ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகமாக விளங்கி வரும் தோனி அதிரடியாக நீக்கப்பட்டு, பின்னர் அவர் வேறு அணிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட வந்தால், எப்படி இருக்கும்.
அதே போல் ஒரு நிலை தான் தற்போது டேவிட் வார்னருக்கு ஏற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து ஐதராபாத் அணிக்காக விளையாடி, வியர்வை, ரத்தம் சிந்தி, அணிக்கு கோப்பையையும் வென்று தந்து இருக்கிறார்.

அப்படிப்பட்ட டேவிட் வார்னர், ஒரு சீசனில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டார். ஐதராபாத் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த வார்னர், தற்போது மீண்டும் தனது இரண்டாவது வீடான ஐதராபாத்திற்கு வந்துள்ளார்.
இது குறித்து டாசின் போது பேசிய வார்னர், ஐதராபாத் மக்கள் என்னை எவ்வளவு விரும்புவார்கள் என்று எனக்கு தெரியும் என்று பழைய நியாபகங்களை சுமந்த படி சொன்னார். தம்மை அவமானப்படுத்திய ஐதராபாத்தை வச்சி செய்ய முடிவு எடுத்த வார்னர், டாஸ் வென்ற உடன் யோசிக்காமல் பேட்டிங்கை தேர்வு செய்வதாக கூறினார்.

ஐதராபாத் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக இந்த போட்டியை பார்க்கிறேன் என்றும் வார்னர் கூறினார். இதே போன்று டெல்லி அணியில் எதற்கு இருக்கிறோம் என்றே தெரியாமல் ஓபனிங் இறங்கிய பிரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதே போன்று விளையாடிய 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றுள்ள ஐதராபாத் அணியும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால் அதற்கான வழியை இன்னும் அந்த அணி கண்டுபிடிக்கவில்லை.