விசாகப்பட்டினம்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் அறிமுகமாகி இருக்கும் நிலையில், தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் சேர்க்கப்படவில்லை.
18வது ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கி இருக்கிறது. டெல்லி அணியின் வலிமையான பவுலிங் லைன் அப்பிற்கும், ஐதராபாத் அணியின் வலிமையான பேட்டிங் வரிசைக்கும் இடையிலான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் டெல்லி அணி ஆடிய முதல் போட்டியில் கேஎல் ராகுல் சொந்த காரணங்களால் விளையாடவில்லை.

தற்போது டெல்லி அணியில் கேஎல் ராகுல் இணைந்திருப்பதால், அந்த அணி கூடுதல் வலிமை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஐதராபாத் அணி மிகப்பெரிய இலக்கை சேஸிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பேட் கம்மின்ஸ் பேசுகையில், நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். கொஞ்சம் வெயில் அதிகமாக உள்ளது. கடந்த சீசனை போல் பெரிய ஸ்கோரை அடிப்போம் என்று நம்புகிறேன். ஆனால் அதனை பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை. கடந்த போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் எங்கள் வீரர்கள் நல்ல மனநிலையில் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பேசுகையில், நாங்களும் முதல் பேட்டிங் ஆடவே நினைத்திருந்தோம். ஐதராபாத் அணியை நிச்சயம் குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்த முயற்சிப்போம். இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே ஆடியிருக்கிறோம். எங்களின் திட்டத்தை சரியாக செயல்படுத்த முயற்சிப்போம். ஒரு பவுலிங் யூனிட்டாக கூடுதல் ஆக்ரோஷத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் அணி தரப்பில் சிமர்ஜீத் சிங் நீக்கப்பட்டு ஈஷான் அன்சாரி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் டெல்லி அணியில் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டு, சமீர் ரிஸ்வி நீக்கப்பட்டுள்ளார். டெல்லி அணிக்காக இந்த போட்டியிலும் நடராஜன் களமிறங்கவில்லை. அவர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், அவர் டெல்லி அணியில் சேர்க்கப்படவில்லை.