ஆக்லாந்து: உலக கோப்பையில் மீண்டும் ஒருமுறை பெற்ற ஏமாற்றத்தால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் கண் கலங்கியபடி விடைபெற்றனர். இதை பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களும் ஒரு நிமிடம் நொறுக்கித்தான் போனது.
மழை காரணமாக மாற்றப்பட்ட விதிப்படி ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து போட்டி, கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக இருந்தது. கடைசி ஓவருக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5வது பந்தில் ஒரு சிக்சருடன் எலியட் அந்த ரன்களை பெற்றுக் கொடுத்தார்.

இந்த தோல்வியை தென் ஆப்பிரிக்க வீரர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக, சுமார் 7 அடி உயரம் கொண்ட மோர்னே மோர்க்கல் மைதானத்தில் அமர்ந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.
டுப்ளசிஸ், டிவில்லியர்ஸ் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஏனெனில், ஆம்லா, டிவில்லியர்ஸ், ஸ்டெயின், மோர்க்கல் போன்ற வீரர்கள் கொண்ட இந்த அணியால் உலக கோப்பையை வெல்ல முடியாவிட்டால் வேறு எந்த அணி வெல்லும் என்ற ஆதங்கம் அவர்களுக்கு.
தென் ஆப்பிரிக்காவின் இந்த நிலையை பார்த்து, தொலைக்காட்சிகளில் இதை பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்களும் ஒரு நிமிடம் கலங்கியது என்றால் அது மிகையில்லை.