28 ஆண்டுகளுக்கு பிறகு நனவான கனவு... 10 ஆண்டுகள் ஆயிடுச்சு... கிரிக்கெட் உலகம் கொண்டாட்டம்!
டெல்லி : தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2011ல் உலக கோப்பையை கைகொண்டது.
கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வெற்றி கொண்டது.
இந்நிலையில் 2011ல் உலக கோப்பையை வெற்றி பெற்றதன் 10 ஆண்டுகள் நிறைவை இந்திய கிரிக்கெட் உலகம் இன்றைய தினம் கொண்டாடி வருகிறது.

நனவான கனவு
கோடிக் கணக்கானவர்களின் கனவு அது. 28 ஆண்டுகளின் காத்திருப்பு நனவான தருணம். முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 22 ஆண்டுகள் காத்திருந்தார். உலக கோப்பையின் கனவு நனவான தினம். திரும்பி பார்க்கும் முன்னதாகவே 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. கடந்த 2011 ஏப்ரல் 2ம் தேதி உலக கோப்பை வெற்றியை தற்போது இந்திய கிரிக்கெட் உலகம் கொண்டாடி வருகிறது.

சாத்தியப்படுத்திய தோனி
கடந்த 1983ல் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த கோப்பையை வெற்றி கொள்ள இந்திய அணி 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இரண்டாவது கோப்பையை முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிதான் சாத்தியப்படுத்தினார்.

இறுதிப்போட்டியில் இலங்கை
2011ல் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோல்வி கண்டது இந்திய அணி. அரையிறுதியில் பாகிஸ்தானை வெற்றி கொண்டு இறுதிப்போட்டியில் இலங்கையை வெற்றி கொண்டது. முதலில் ஆடிய இல்ங்கை அணி 275 என்ற கடுமையான இலக்கையே கொடுத்தது.

கைகொடுத்த கம்பீர், தோனி
ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது இந்திய அணி. சச்சின் டெண்டுல்கர் சொற்ப ரன்களில் அவுட்டாக அடுத்ததாக களமிறஙகிய கவுதம் கம்பீர் 97 ரன்களையும் தோனி அவுட்டாகாமல் 91 ரன்களை எடுத்து இந்தியாவின் சிறப்பான வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.

தொடர் நாயகன் யுவராஜ்
இந்த தொடரில் ஆட்ட நாயகன் விருது தோனிக்கும் தொடர் நாயகன் விருது யுவராஜ் சிங்கிற்கும் கிடைத்தது. போட்டியை அடுத்து கண்ணீருடன் யுவராஜ் சிங்கை கட்டித் தழுவினார் சச்சின் டெண்டுல்கர், அவரது 22 ஆண்டுகால உலக கோப்பை கனவு நனவானதன் வெளிப்பாடு அது. அவரது கண்களில் கண்ணீரை பார்க்க முடிந்தது.

யுவராஜின் போராட்டம்
இந்த போட்டியின்போது கேன்சருடன் தான் போராடியது குறித்து பின்பு வெளிப்படுத்தினார் யுவராஜ் சிங். போட்டியை அடுத்து டெண்டுல்கரை தோளில் சுமந்து மைதானத்தை சுற்றி வந்தது இந்திய அணி. நாட்டு மக்கள் அனைவரும் வெற்றியை அடுத்து வீதிகளில் வந்து தேசிய கீதத்தை பாடினர்.

இந்திய கிரிக்கெட் உலக கொண்டாட்டம்
இதனிடையே தற்போது 10 ஆண்டு கொண்டாட்டத்தை இந்திய கிரிக்கெட் உலகம் கொண்டாடி வருகிறது. வாழ்நாள் நிகழ்வு என்று முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய வாழ்வின் முக்கியமான தினம் என்று ஹர்பஜன் சிங்கும் ட்வீட் செய்துள்ளார். தொடர்ந்து வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகினற்னர்.


Click it and Unblock the Notifications