
ஆசிய கோப்பை அணி
இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் என பலமான வரிசையை கொண்டுள்ளது. இதில் அனைவரும் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றால் நிச்சயம் இந்தியா பெரும் ஸ்கோர் அடிக்கும். ஆனால் இந்தியாவின் பவுலிங் தான் சற்று கவலையளிக்கும் வகையில் உள்ளது.

காரணம் என்ன
முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இதனால் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் என 2 அனுபவம் இல்லாத பவுலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அனுபவ வீரராக புவனேஷ்வர் குமார் மட்டுமே இருக்கிறார். இதில் அர்ஷ்தீப் நல்ல ஃபார்மில் உள்ளபோதும், ஆவேஷ் கான் ரன்களை வாரி வழங்கி வருகிறார். ஜிம்பாப்வே தொடரிலும் அதிக எகானமியை வைத்திருந்தார்.

கிடைத்த தீர்வு
இந்நிலையில் அதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது. ஆசிய கோப்பை அணியில் முன்னணி வீரர் தீபக் சஹார் பேக் அப் வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஜிம்பாப்வே தொடரில் இவர் விளையாடுவதை வைத்து மெயின் அணிக்கு சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்போது சிறப்பாக விளையாடி மீண்டும் தனது ஃபார்மை சஹார் நிரூபித்துக்காட்டியுள்ளார். ஜிம்பாப்வே தொடரில் அவர் 2 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

மாற்றம் செய்ய முடியுமா
ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பு வரை அணியில் மாற்றங்களை செய்துக்கொள்ளலாம். எனவே ஆவேஷ் கான் நீக்கப்பட்டு, தீபக் சஹார் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பவர் ப்ளே மிக முக்கியம். அந்த பவர்ப்ளேவில் விக்கெட் மழை பொழிய புகழ்பெற்றவர் தான் தீபக் சஹார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











